Popular Posts

16 January 2010

காதல்



கொடி கம்பியில் ஒட்டி கொண்ட
துளி மழை போல அழகானது
பூ தழுவி சுகந்தம் சுமந்த
பூங்காற்று போல இதமானது
உரு கரைந்து ஒளி தரும் மெழுகு போல
வலியானது
கரு திறந்து உயிர் கொண்ட சிறு சிசு போல
புதிதானது
குருத்தோலையில் கரு கொண்ட கவி வரிகள்
போல பழமையானது
கல்லறையில் பூத்து கடவுள் காலடி சேராத
சிவந்த சின்ன மலர் போல அமைதியானது
சில்லறை சிதறல்கள் போல
ஆரவாரமானது
தரையில் பூத்த விண்மீன்கள் போல
அதிசயமானது
பாலை வன வழிப்போக்கனை
காத தூரம் கடக்க வைக்கும்
கானல் நீர் போல பொய்யானது
கண்ணீர்துளியில் கலந்த உப்பு போல்
மெய்யானது
சுவாசகுழாய் சென்றும் செங்குருதி கலக்காத
காற்று போல அதிருஷ்டமில்லாதது
அலை கரை மணல் வீடுகள் போல
நிஜமிழந்தது
போர் நேர சங்கொலி போல
வன்மையானது
மழை நேர குயிலிசை போல
மென்மையானது
காகித கப்பல்கள் போல கரை சேராதது
கலங்கரைகள் போல கரை சேர்ப்பது
பூமி உள் சுமக்கும் செங்கனல் போல
உறங்காதது
ஆதலினால் தான்
காதலிக்காதவனும் காயப்படாதவனும்
மனிதரில் இல்லை