24 December 2009

மழை


பொன் மஞ்சள் வானம்
பூமிக்கு தன் காதல் சொல்ல
காலம் கனிய கண்டு
கருவண்ணம் பூசிக் கொள்ள
வெண் மேக குவியல் எல்லாம்
சிறகடித்து உடலொழித்து கொண்டன
வெட்கத்தில்
கதிரவனும் கதவடைத்து கொள்ள
சிந்திய கதிர்களில் ஒன்றிரண்டு
வானவில் கோலமிட்டு
காதலின் வருகையை தந்தியடித்ததோ
ஐநிலத்துக்கும்
சினத்தில் விழிதுடித்து மின்னல் கீற்றொன்று
துள்ளி மறைந்தது
கங்கண பேரொலி வான் திறந்தது
நானே சொல்லி கொள்வேன்
என் காதலை என்று தானோ…
கடலவன் பொங்கி சிரித்தான்
இந்த காதல் விளையாட்டு கண்டு
நாணல்கள் முகம் மலர்த்தின
ஆவலை அடக்க முடியாமல்
புள்ளினங்கள் கதவடைத்து
ஒளிந்திருந்து உளவறிந்தன
தோகை விரித்த நீல மயில்
சேதி சொல்ல நடமாடியது
விவசாயி விழி நீர் துடைத்தான்
தன் சின்ன மகள் மனம் மகிழ்வாள் என்று

உச்சி வானம் தொட்ட சின்ன துளி நீர்
தன் முதல் முத்தம் சுமந்து
நிலம் நாடி வர
குறும்பு மிக்க தென்றல் வீசி
அந்த முதல் முத்தத்தை
பூவிதழுக்கு பரிசளித்து சிரித்தது
தென்றலின் வம்பினால் கொதித்து
பல்லாயிரம் முத்தங்களை
அள்ளி தெளித்து தன் வீரம் காட்ட
அசட்டு தனமாக இடித்து உலகெழுப்பி கொண்டான்
விண்ணவன்.
பூமகள் புன்னகைத்து கொண்டு
தன்னை நாடி சிந்திய முத்தங்களையெல்லாம்
அள்ளி கொண்டு
தென்றலுக்கு தன் வெற்றி சொன்னாள்
தலை குனிந்து சுமந்து சென்றது தென்றல்
பூமகள் வெற்றியை மண்வாசனையாய்..
மணி கணக்காய் இதமாக
மனம் பரிமாறி கொண்டனர்
விண்காதலனும் மண் காதலியும்
எப்போதாவது இணைப்பு கொடுக்கும்
மழை தொலை பேசி சேவையில்…

6 comments:

  1. ”மழை தொலை பேசி சேவையில்…”
    சிக்னல் ஒழுங்கா இருந்தா சரி...

    ReplyDelete
  2. //சிந்திய கதிர்களில் ஒன்றிரண்டு
    வானவில் கோலமிட்டு //

    ரசனை மிக்க வரிகள்...!

    ReplyDelete
  3. ரசனை இல்லாதவர்கள் மழை என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்வார்கள்.
    நிங்கள் மழைக்கு புது விளக்கமே தந்துவிட்டீர்கள்.அருமை

    ReplyDelete
  4. பொன் மஞ்சள் வானத்தின் முத்தத்தை பூமகள் பெற முன் எத்தனை இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி உள்ளது. :-))

    ReplyDelete
  5. மிகவும் அழகாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. it perfect i love now i am your fan permanently


    love vaasu

    lots of kisses

    ReplyDelete