
வானம் துறந்து கடல் கலந்து
உப்பாக உடல் கொண்ட மழைதுளி,
பாறையின் உரு பிளந்து
உயிர் கொண்ட சிறு வேர்,
காமத்துக்கு மெருகூட்டிய கந்தர்வம்.
நீர் விழுந்தும் உடல் நனையாத நிழல்,
நீலம் இழந்தால் மட்டும் தொலைந்து போகும்
தெரு பிச்சைகாரனின் வான் கூரை,
வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில்
விலங்கிழந்த சாணக்கிய இடைவெளி,
காதலி மார்பு சாய்ந்து சிந்திய
ஒரு துளி கண்ணீர் சொன்ன காதல்,
அழகான சாசுவதங்கள்……….
ஏதோ ஒரு இனம் தெரியாத ஆண்டின்
பனியிருட்டில் மரித்து போன மானுடம்…
தம் முகம் பார்த்து சிரித்து கொள்ளும்
சுய நல கண்ணாடிகள்…
புன்னகை கதவுகளின் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும் பொய்கள்…
இலவச இணைப்பாக இழந்த பகுத்தறிவு
மரணப்படுக்கைகளிலும் வார்த்தை
கொள்ளாத வாய்மைகள்…
பட்டணங்கள் மெல்லாமல் விழுங்கிய
பசுமைகள்…
மேலிசை நாகரிகத்தில் நசுங்கிக் கொண்டிருக்கும்
மோகன மெல்லிசை…
கடவுள் மட்டும் மறந்த பூவுலகம்…
இன்று இணைந்து கொண்டன
சாசுவதத்தில் சாசுவதமாக…