20 December 2009

என் சேரி தேவதை


“அம்மா….!!! எப்பம்மா நான் ஸ்கூலுக்கு போலாம்??? “
ஆரவாரமில்லாத அமைதியான குரலில்
ஏக்கமா எதிர்பார்ப்பா
பரபரப்பா பரிதவிப்பா
இதில் எதுவென இனம் காண முடியாத
மழலையில் மிழற்றினாள்
என் ஆறு வயது நிரம்பிய அழகு மகள்
வாரப்படாத முடியிலும்
வாரக்கடைசியில் பெய்த மழையில் அலசிய ஆடையிலும்
அசாத்தியமாக பளபளத்த கண்களுடன் கேட்டாள்.
இலகுவான கேள்வி, ஆம், இல்லை என்ற இரு சொல்லில்
ஒன்றில் இலகுவாக சொல்லிவிடலாம்.
ஆனால் இரண்டில் எதுவும் என்னால் இயலவில்லை
”கஞ்சி குடிக்க வாறியா கண்ணம்மா????” என்றேன்
ஓடிவந்து உட்கார்ந்து
” நான் நல்லா கஞ்சி குடிச்சி நல்லா வளந்து
ஸ்கூலுக்கு போனா
பின்னால அதில நீயும் நானும் போலாம்மா!!!! ..”
தன் பிஞ்சு விரலொன்றை விண்ணில் நீட்டிய
வண்ணம் விளம்பினாள்
விண்ணில் சென்ற விமானப் பறவையை
நோக்கி தன் எதிர் கால கனவு சிறகுகளை விரித்த வண்ணம்…
விழிகளுக்குள் வலிக்க அவளை வாரியணைத்து கொண்டேன்.

ஒரு சாலையின் ஓரத்தில்
காட்டுதனமாக வளர்ந்த மரத்தடியில்
நான்கு தடி மேல் ஒரு தகரம்
என குறைந்தது முப்பது முகவரிகள்
அதில் ஒன்று எனக்கும் என் மகளுக்கும்

வறுமையை உணரவில்லையா???
இல்லை உணர்ந்து கொண்டாளோ???
எனக்கு தெரியவில்லை
ஆனால் அவள் விழியில் கனவுகள்
தேடல்கள் ஆதங்கங்கள்
பூவிதழில் பனித்துளி போல் அழகாக…
நான்கு வயதில் ஓர் நாள் கேட்டாள்
“ஏம்மா எனக்கு அப்பா இல்ல?? “
என் கன்னிமை இழந்த கதை சொல்லும் வகை
தெரியாமல் விழி நனைய
“உனக்கு அம்மா இருக்கேம்மா!!!! “ என்றேன்
என் விழி துடைத்து கேட்டாள்
“ஏம்மா எனக்கு பேரில்லை?? “
இதயத்தில் வலி ஒன்று ஓடியது
”நீ என் கண்ணம்மா…” என்றேன்
கட்டியணைத்து முத்தம் தந்தாள்
என் கண்ணம்மா…
எண்ண கதவுகளில் இருந்து வெளி வந்து
என் கைகளிற்குள் இருந்தவளை
விடுவித்தேன்

என் சின்னக் குருவிக்கு சிறகு முளைத்தது
வறுமைக்குள் கனவு வந்தது
என் தாய்மைக்கு விழி நனைந்தது
விடை காண முடியாமல்…..
“அம்மா …நான் ரீச்சராகணும்மா!!!
அப்பதான் என்னை மாதிரி எல்லாருக்கும்
பள்ளி கூடம் இல்லாம பாடம் சொல்லிதரலாம்…”
என்றாள் தன் கஞ்சிக்குள் எங்கே இருக்கின்றது
என்றே தெரியாத ஒரு பருக்கை
சோறை எறும்புக்கு வைத்தபடி….
எனக்கு பதில் தெரிந்தது
என் தந்தையின் குடி மயக்கத்திலும்
தாயின் மனவொடுக்கத்திலும்
ஒடிந்த என் கனவுகள்
என் மகளுக்கும் ஒடிய கூடாது.
அவளின் கனவு என் தவம்…
அவள் பள்ளியுடை அணிய
நான் வேலைக்காரியாகினேன்
கூலிக்காரியாகினேன்
தெருக் கூட்டினேன்
முதலாம் வகுப்பில் முதலாவதாக வந்தாள்
என் சேரி தேவதை….!!!!!!