
பொன் மஞ்சள் வானம்
பூமிக்கு தன் காதல் சொல்ல
காலம் கனிய கண்டு
கருவண்ணம் பூசிக் கொள்ள
வெண் மேக குவியல் எல்லாம்
சிறகடித்து உடலொழித்து கொண்டன
வெட்கத்தில்
கதிரவனும் கதவடைத்து கொள்ள
சிந்திய கதிர்களில் ஒன்றிரண்டு
வானவில் கோலமிட்டு
காதலின் வருகையை தந்தியடித்ததோ
ஐநிலத்துக்கும்
சினத்தில் விழிதுடித்து மின்னல் கீற்றொன்று
துள்ளி மறைந்தது
கங்கண பேரொலி வான் திறந்தது
நானே சொல்லி கொள்வேன்
என் காதலை என்று தானோ…
கடலவன் பொங்கி சிரித்தான்
இந்த காதல் விளையாட்டு கண்டு
நாணல்கள் முகம் மலர்த்தின
ஆவலை அடக்க முடியாமல்
புள்ளினங்கள் கதவடைத்து
ஒளிந்திருந்து உளவறிந்தன
தோகை விரித்த நீல மயில்
சேதி சொல்ல நடமாடியது
விவசாயி விழி நீர் துடைத்தான்
தன் சின்ன மகள் மனம் மகிழ்வாள் என்று
உச்சி வானம் தொட்ட சின்ன துளி நீர்
தன் முதல் முத்தம் சுமந்து
நிலம் நாடி வர
குறும்பு மிக்க தென்றல் வீசி
அந்த முதல் முத்தத்தை
பூவிதழுக்கு பரிசளித்து சிரித்தது
தென்றலின் வம்பினால் கொதித்து
பல்லாயிரம் முத்தங்களை
அள்ளி தெளித்து தன் வீரம் காட்ட
அசட்டு தனமாக இடித்து உலகெழுப்பி கொண்டான்
விண்ணவன்.
பூமகள் புன்னகைத்து கொண்டு
தன்னை நாடி சிந்திய முத்தங்களையெல்லாம்
அள்ளி கொண்டு
தென்றலுக்கு தன் வெற்றி சொன்னாள்
தலை குனிந்து சுமந்து சென்றது தென்றல்
பூமகள் வெற்றியை மண்வாசனையாய்..
மணி கணக்காய் இதமாக
மனம் பரிமாறி கொண்டனர்
விண்காதலனும் மண் காதலியும்
எப்போதாவது இணைப்பு கொடுக்கும்
மழை தொலை பேசி சேவையில்…