15 February 2010

வசப்படும்


பாழடைந்த என் இரவுகள்
பனி சால்வைகள் போர்த்தி கொள்ள
உதிரி பூக்களாய்
ஏகாந்த இமை மடி நீர் துளிகள்..
விழியில் உயிர் கொண்டு
இதழ்கடை வரை உயிர் வாழ்ந்து
தலையணை சரிவில் உயிரிழந்து கொண்டிருந்தன
காரிருளில் கண்ணீரின் கலகம்
மனதுக்குள் சங்கேத சலனம்
சாளர திரை நீக்கினேன்
பனி தரளங்கள் சுமந்த பசும் புற்சாலை
குழல் கலைக்கும் குளிர் தென்றல்
மல்லிகையின் மெல்லிய சுகந்தம்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையின்
இதமான கீதம்
வான் எங்கும் சங்க தமிழ் மகளின்
மூக்குத்தி மாணிக்கங்களாய்
முளைத்த மின்மினி விண்மீன்கள்
விண் நிலா இல்லா அமாவாசையில்
விடியலில் கடை வரை விழா போல விழித்திருந்தேன்
தாய் மடியின் இதம் உணர்ந்தது போல்
ஒற்றை பனையடியில் ஒரு தூண்டா மணி சுடர்
விடிவெள்ளி…
விடியலின் அழகான ஆரம்பம்
மனதுக்குள்
விண்ணைதாண்டி வருவாயா விண்மீனே???
என்று வலி மறந்த ஒரு கிள்ளை குரல்….
நான்கு சுவருக்குள் மனதின் மையத்தில்
செங்கோல் கொண்ட வேதனைகள்
திறந்த வானின் கீழ் சிறகுகொண்ட
சருகுகளாயின
இயற்கை அழகானது மட்டுமல்ல
ஆத்மார்த்தமானதும் கூட
புற விழி மூடி அக விழி திறந்தால்
வானம் கூட வசப்படும்….
வாழ்வு மட்டும் வசப்படாதா?