27 March 2010

என்னவானேன் நான்??



கரையோடு கால் கொண்டாலும்
நீரோடு அலையாடும் நிழலானேன்…
மழைக்காற்றில் சிக்கி கொண்டு
கை நில்லாத குடையானேன்…
ஆரவாரிக்காத நீரோடையிலும் வேர் கொள்ள முடியாத
பசும் பாசியானேன்…
ஒளியின்றியே உள் வெப்பத்தில்
உருகும் ஓர் மெழுகானேன்..
வார்த்தைகள் இன்றி மௌனியானேன்
மௌனக்கூச்சலிற்கும் மறுமொழியின்றி
ஊமையானேன்….
சுய விம்பத்துக்கு அந்நியமானேன்…
நண்பர்களுக்கும் யாரோவானேன்…
பனி உருகும் இரவுகளில்
மணிக்கம்பிகளுக்கு தோழியானேன்….
இலக்கிய பிழறல்களுக்கெல்லாம்
இலவச வக்கீலானேன்…
எழுதிய கவிதைகளுக்கு நானே ரசிகையானேன்…
தனிமையில் தளை களைந்து
வெறுமைக்கு வித்திட்டேன்…
வெறுமைக்குள் விரவிய வேதனைக்கு
விஞ்ஞான விளக்கம் தந்தேன்…
வினாக்களுக்கு விடைகள் தவிர்த்தேன்…
விடைகளுக்கு மட்டும் வினாக்கள் கொணர்ந்தேன்…
புன்னகைக்கு புது அர்த்தம் கண்டேன்…
கண்ணீரிற்கோ காவியம் பாடினேன்…
தென்றலுக்கும் உடல் சிலிர்த்தேன்…
கனவுகளுக்குள் கைதியானேன்…
தன்னை மறந்த ஏகாந்த இருட்டில்
காதலெனும் ஆழியில் விழுந்து கலந்தது
என் விழி வழிந்த ஒருதுளியும்….
காரணம் தெரியாமல் ’’என்னவானேன் நான்??’’
என நொடிக்கொருமுறை சலித்து கொண்டேன்…