29 June 2010

அவளுக்கு மட்டும் தெரிந்த வலி


”இருபத்தி நாலுதானேயாகுது”
”இரண்டாம் தாரம் இப்ப எல்லாரும் செய்யிறது தானே??”
”எங்களுக்கு பிறகு உனக்கு யார் துணை??”
கேள்விகளுடன் ஒரு அப்பா…
மௌனமாக ஒரு மகள்…
மௌனமே மறுப்பாகவும் கூடுமோ??

ஊமையிடமும் வார்த்தைகள் உண்டு
வார்த்தை உறைந்து ஊமையானவர்களும் உண்டு..
இரண்டாவது ஜாதி அவள்…
அவள் நீண்ட மௌனங்கள்
வார்த்தை கொண்டால்
போதிமரங்கள் மட்டும் போதும்
புத்தனை கொழுத்து என்பாளோ???.
மழை பொழிந்த பின்னான களி நிலமாய்
இருந்த அவள் இதயம்
ஒரு கல்லாகி இறுகியிருக்கிறதோ???
இது இல்லாத நெருக்கங்களை
உண்டாக்க விரும்பாத
திண்ணக்கமா??
இல்லை ஏதோ ஒரு நம்பிக்கைக்குள்
உயிர் கூடு காத்து அவள் செய்யும் தவமா???

அனைவரும் ஒப்பாரி வைக்கையில்
அழடி எண்டு அம்மா அறைந்தும்
விழியில் மட்டும் உயிர் கொள்ள
மறுத்ததாம் அவள் கண்ணீர்…
ஆண்டு நான்கு கடந்தும் இன்னும்
அழவில்லையோ??

வலக்கையில் வலை கொண்டு
இடக்கையால் அவள் கன்னம் வருடி
கருக்கலில் வருவதாக சொல்லி
கடல் சென்றவனின்
ஏழை மனைவி அவள்…
காத்திருக்கிறாள் இன்னும்…
கனவு போல் அந்த வலக் கன்னத்து
கடைசி வருடல் மட்டும் இன்றும் ஈரமாக…

மணிக்கொரு தடவை
மின்னி மின்னி காதல் சொல்லும்
கைத்தொலைபேசி இல்லை…
நுனி நாக்கு ஆங்கில காதல் அறிவிப்புகள் இல்லை…
நள்ளிரவு நளினங்கள் இல்லை….
வாழ்கிறதே இன்றும் காதல்…
கடற்கரை குடிசையில்
உப்பு காற்றில்…
கருவாட்டு வாசத்தில்…

தவளைகளின் கூச்சல்
தண்டடியில் சேறு
இலை மறைத்து பாசி
ஆனாலும் இடையில் அழகான மலர்
தாமரை…
அது போல ஒரு காதல்…
ஆனால்
மந்திரத்துக்குள் கட்டுண்டது போல்
கொண்ட மௌனம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த வலி…


++++++++++++

பறப்பதற்கு சிறகில்லை


காதல் கடிதங்கள்
அழகானவை….
யதார்த்தம் மீறியவை….
“பகலதிலும் பௌர்ணமி குளிர்மை உன்னால்”
“கொன்றாலும் சாகாது என் காதல்”
“உன்னை பிரிந்தால் இயங்காது என் உலகம்”
இவையெல்லாம் கடிதங்கள்
நிரப்பிய காதல் அறிக்கைகள்…
ஆனால்
குடையிருந்தும் மழையில்லை என்பது போல்
நிஜமாக திரிக்கப்படும் பொய்கள்…
அறிந்து கொண்டேன்…
வெள்ளொளியில் நிறப்பிரிக்கையில்
தோன்றும் ஏழு வண்ணங்கள் போல
மனிதர்கள் நிறம் பிரிகையில்தான்
அறிந்துகொண்டேன்….

உணர்வுகள் உயிர் வலி கொள்கையில்
கண்கள் பேசும்
தண்ணீர் மொழியான கண்ணீர்
ஆரம்பத்தில் தலையணை தோய்ந்து
பின் விசும்பல்களாகி
இப்போதெல்லாம் மௌனங்களாக மட்டுமே….
இரவில் உடல் கொண்டு உருவாடும் துன்பங்கள்
விடியலின் வெளிச்சத்தில்
தற்காலிக தலை மறைவு...
ஆனாலும் ஆழ் மனதின்
முணுமுணுப்புளிற்கு ஓய்வில்லை...

உறக்கம் மறந்த என் இரவுகள்…
இதயம் கசியும் வெறுமைகள்…
வெண் தாளில் வரைந்த சித்திரங்கள் எல்லாம்
வெறும் கோடுகள் மட்டுமே என்றான
தோல்விகள்…
நட்சத்திர பருக்கைகள் மட்டுமே இரவுணவாகி
கனவிழந்த விழிகள்…
வீடு மறந்த
முகவரி இழந்த மேக கோலங்களை
அண்ணாந்து பார்க்கையில் ஆட்கொள்ளும்
அமானுசிய அமைதி..
வனாந்தரத்தில் உலவும் நிலவு
ஆழ்கடலில் பொழியும் மழை
போல்
உறவற்ற ஓர் தனிமை…
இவையெல்லாம் சுய தண்டனைகளா???
அல்லது
சுயம் வெறுத்தபின் தோன்றும்
ஆழ்ந்த அமைதிக்கான தேடலா???

காதலியானவள் மனைவியானதும்
காதல் இனித்தது
மனைவியானவள் மலடியானதும்
மடிந்தது காதலா?? மனிதமா??
பாலைவனங்களில் தாகம் மிகுகையில்
ஒட்டகவதை உயிர் கொலை அல்ல
அது பாலைவன நியாயமாம்…
ஆனால்
இடமும் காலமும் மட்டுமே
நியாய அநியாயங்களை நிர்ணயிக்கும்
அதிகாரத்தை அளித்தது யார்??
மழை துளிகளை ஏற்கையில்
இடி முழக்கங்களை ஏற்க மறுப்பது
எந்த வகை நியாயம்??
இயற்கை வஞ்சித்த தாய்மை நிராகரிப்பு
தனி ஒருத்தியின் திட்டமிட்ட
சதியாக சித்தரிக்கப்பட்டது
என்ன நியாயம்???
வாழ்க்கை கற்று தர முயற்சிப்பது
ஏமாற்றங்களையும் தோல்விகளையும்
எப்படி பழக்க்கப்படுத்தி கொள்வதுதான்
ஆனாலும்
பழக்கப்படாமல்
இன்றும் பறக்கத்தான் துடிக்கிறேன்
சிறகில்லை…..

26 June 2010

விழிகள்


இளங்கதிர் கோலங்கள் இழந்த கருங்காலை…
விண் நீந்தும் சில வான்மீன்கள்….
இருளும் ஒளியும் இணைகின்ற
இன் முத்த தருணங்களில்
மொட்டகலும் மென் மலர்கள்…
உளியிடம் தோற்ற கல்
சுமந்த சிலை கவிதைகள்..
இயற்கையின் ஈரமான மௌனத்தால்
இசையிழந்த ஏகாந்த இடைவெளியதனில்
கவியின் வார்த்தைகளிற்கான காத்திருப்பு போல்
கண்ணிழந்த அவளின் கனவுகள்
காட்சிகளுக்கு காத்திருப்பு….
கனவின் கயமைகளின் பதில்கள்
இருள் மட்டுமே நிறைந்த இரவுகள்…
விழிகள் ஒளியிழந்தால் கனவுகளுக்குள்ளுமா கதவடைப்பு???
காதோடு சேதி சொல்லி
கையோடு சேராத தென்றல் மட்டும்
துடைத்து செல்லும்
அன்றாடம் அவள் சிந்தும் பல திவலைகளை
விழி வருடி…..
அந்த வருடல் ஒன்றே அவள்
விழி உணரும் உலகு…

புழுதி படிந்த சித்திரங்கள்
வரையப்பட்டும் அறியப்படாதன….
ஒளியிழந்த கண்கள்
உடலிருந்தும் உயிரில்லாதன…
மண் தின்னும் கண்களை கொண்டு
மறு உயிரின் கனவுகளுக்கு
உயிர் கொடுங்கள்
இறப்பிலும் ஒளி காண்பீர்…



++++++++++++++++