11 January 2010

திசை தெரியாமல்


சருகுகளில் சலனங்களில்
காலடி தடங்கள் கேட்டு
ஆண்டாண்டாய் கதவு திறக்கும்
முதிய தாய்…
பாலாபிசேகம் எம்பெருமானுக்கு
வாயிலில் இல்லாமையில் பசித்திருக்கும்
இயலாத பக்தன்…
நூறு விண்ணப்பங்களின் பின்னும்
கிட்டாத வேலைக்கு மறுபடியும்
அஞ்சலில் விண்ணப்பிக்கும்
விக்கிரமாதித்த பட்டதாரி…
கதவுகளை அடைத்த காதலி
கனவுகளில் கை கோர்த்ததால்
கண்ணீர் சிறைக்குள் தவிக்கும்
ஒருதலை காதலன்…
ஆட்சி மாற்றம் இடைதேர்தல்
அரசாங்க பண சுரண்டல்
அரசியல் மறந்த அவஸ்தையில் அரசியல்வாதி…
கணக்கு பாடத்தில் மட்டும் பத்தை தாண்டாத
பரீட்சை விடைத்தாளை
மறைக்கும் முயற்சியில் பத்து வயது மாணவன்…
சல்லாப வேளையிலும் முன்னாள்
காதலியின் இமையசைவுகளின்
இம்சைகளுடன் சராசரி கணவன்…
ஊழிக்கால துரும்பாய் ஓராயிரம்
மானுட உள்ளங்கள் திசை தெரியாமல்…..