08 April 2010

என்னில் நீ…


மழையின்றி
நிலமின்றி
விதையின்றி நின்றிருந்த
என் தோட்டம் எங்கும் வண்ண பூக்களாய்
நீ மலர்கிறாய்

இதயம் வலிக்காது
கண்கள் கனக்காது
ஆனந்த நீராகி கன்னம் வழியே
நீ வழிகிறாய்

பாதை தெரியாத
பயணம் புரியாத இருட்டுக்குள்
கை கோர்த்து வழித்துணையாகி
நீ நிற்கிறாய்

உலகம் மறந்து
உறங்கும் நிமிடங்களில்
கனவாகி
நீ நிறைகிறாய்

கனவு கலைந்தும்
கலையாத புன்னகையாகி
உதட்டோரத்தில்
நீ உறைகிறாய்

கடல் வானம் கடந்து
கறையில்லா அன்பால்
என் உள்ளமெங்கும்
நீ வேரோடுகிறாய்

நீ வரும் வரை
என் நிழல் மறந்திருப்பேன்
நீ வந்து விடு
உன் நிழலாகி நான் வாழ்வேன்…

04 April 2010

காத்திருப்பு...


இதழ் விரிக்கும் மொட்டுகள்
தேன் தேடும் வண்டுகளின் காத்திருப்பு….
வான் கடந்து வரும் துளி மழை
தரிசான நிலத்தின் காத்திருப்பு….
வசத்துக்கு வராத வார்த்தை
கவிஞனின் காத்திருப்பு….
பூங்காற்றின் உடல் வருடல்
துளை மூங்கில்களின் காத்திருப்பு….
தாரகை கூட்டத்துக்குள் கரையாத மதி
முப்பது நாட்களின் காத்திருப்பு…
கலங்கரை விளக்கங்கள்
திசை தொலைத்த கப்பல்களின் காத்திருப்பு…
வந்து சேராத கடிதம்
வயதான தாயின் காத்திருப்பு…
மின்னி மறையாத தொலைபேசி
நகம் கடிக்கும் காதலியின் காத்திருப்பு…
விரிந்த நீல வானம்
சிறகு முளைக்காத சிறு குருவியின் காத்திருப்பு..
உன் ஒற்றை வார்த்தை
என் காத்திருப்பு…

02 April 2010

அச்சில்...


உடையாத ஒரு நிலவு
உதிராத சில விண் பூக்கள்
வான் கூரையின் கீழ்
உன் மடி சாய்ந்த நான்
என் விரல் விளையாடும் நீ

வெண் நுரை அலை கரை
அந்தி கதிரவன் அகம் நாடும் பொன் மாலை
மணல் வீடு கட்டும் நான்
அலை திருடும் என் வீட்டை பார்த்து நகைக்கும் நீ

ஓர் மதியம்
உயிர் போகும் உணவு வேட்கை
உப்பு மிகைத்த என் சமையல்
ஊறுகாயுடன் உன் சமாளிப்பு

அதிகாலை
ஆறுமணி பறவை
பாத கொலுசு சிணுங்கும் நான்
பள்ளி கலையாத நீ

சாளரம் சில்லிடும் வான் மழை
உயிர் வரை ஊடுருவும் குளிர்
உன் கைவளைவுக்குள் நான்
நீண்ட மௌனத்தின் பின் உன் முத்தம்

வார்த்தையாடும் நான்
நாடி கொதிக்கும் நீ
ஊடலில் உறையும் நிமிடங்கள்
கன்னம் நிறைத்த என் விழி துளிகள்
சினம் மறந்து என் விழி துடைக்கும் நீ

பஞ்சாய் முது நரை
பள்ளி செல்லும் பேர குழந்தை
உறைந்த நம் நெருக்கம்
உறையாத நம் காதல்

என் கனவுகளில்
நாம் வாழும்
ஆயிரம் பிரதிகள்
அச்சில்...
உறக்கம் கலைந்தாலும்
கலைய மறுக்கும் என் கனவுகள்...



++++++++++

01 April 2010

உனக்கென….


வார்த்தைகள் இல்லாத
ஏழையாய் நான்….
வார்த்தைகள் கொள்ளாத
மௌனமாய் நீ…
இந்த விடியலும் உறக்கமில்லாமல்
விடிய
இரக்கமில்லாமல்
என் இரவுகளை கொல்லும்
ராட்சசனா நீ...
வெண் தாளாகி வினாக்களாய்
காத்திருக்கிறேன்…
வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம்
சில வார்த்தையேனும் எழுதி செல்…