மொட்டு அகம் சுமந்த மௌனம்
மலரில் சுகந்தமானது
கரு வானம் கதிரிழந்த மௌனம்
மண் நனைந்த துளியானது
கவி கரம் கனிந்த மௌனம்
கவிதையாக தாள் நனைந்தது
ஆழ்கடல் வெண்சிப்பி சேமித்த மௌனம்
முத்தாக கடல் கவர்ந்தது
கருங்குயிலின் இலையுதிர் கால மௌனம்
வசந்தத்தில் கீதமாகியது
உறங்கிய விழிகளின் மௌனம்
கனவாகி காட்சியானது
இயலாமை கொண்ட மௌனம்
ஏழ்மையில் பசியாகியது
இதய இடுக்குகளில் காதல் கருக்கொண்ட மௌனம்
மட்டும்
வார்த்தையின்றி மௌனமாகவே மௌனித்தது