14 March 2014

அனுபவம்

ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும்
கொன்று உரமாக்கி
கொப்பும் கிளைகளுமாக
இதயத்தின் இடுக்குகள் எங்கும்
நிரம்பி நின்றன வலி மரங்கள்….

இளமையின் ஆரம்ப நாட்கள்
ஒவ்வொன்றுமே வெற்று காகிதங்களாக...
எழுதிய ஒவ்வொரு வரிகளும்
இலக்கணம் சரி பார்க்கப்படாத காவியமாக…

ஆனால் அனுபவம்
ஒரு ஆரவாரமான ஆசான்…
காவியங்களை சூனியமாக்கினான்...
ஆறாத சில வலிகளால் மனதை சுற்றி வேலியிட்டான்…
போதாதென்று
பயங்களால் தாளிட்டான்..

இன்று சிறக்க துடிக்கும் சின்ன பறவையில்
வண்ணச் சிறகுகளாய் விரிந்த கனவுகளும்...
உந்தி எழுந்த போதெல்லாம்
விலங்குகளாய் கால்களுக்குள்
கனத்த தளைகளும்...
சூழ்ந்த ஏகாந்தத்துள்
விடை தேட விளங்கா விடுகதையாய்
ஒரு வாழ்க்கை....