26 March 2014

அவசரம்


காவிய காதல் கவிதைகளில் மரித்து போக,
கலியுக காதல் அன்றாட காட்சிகளில் சாட்சியாக,
விழி மடல்கள் நாண கதவடைப்பதில்லை...
இமைத்துடிப்பின் பிரிவில் உயிர் கனப்பதுமில்லை...
கைத்தொலைபேசி இரவில் தலையணைக்கடியில்
பகலில் குழியலறையில் மணிக்கணக்கில்
அவனது பெயர் தோழியின் பெயரானது..
சிரித்து கொள்வோம் சில சமயம்...
அடித்து கொள்வோம் பல சமயம்...
கை கோர்த்து சாலைகள் அளந்தோம்...
அன்றில் பறவையில் இரண்டானோம்...
இடையில் ஏதோ ஞானம் தோன்ற,
இது நம் பாதை இல்லை என்று
அவசரமாய் முடிவெடுத்தோம்...
மனமொன்றி
காதல் கதிரை மீண்டும்
கரும் இருட்டுக்குள் கட்டி கொண்டு
நட்பு பனிசால்வை போர்த்தி
கை குலுக்கி கொண்டோம்...
இருதிசை பறவைகள் என பறை சாற்றினோம்...
தண்டவாளம் எனவும் சொல்லி கொண்டோம்...
சமாந்தர கோடுகளில் எம் பயணம்..
இதுவரை எல்லாம் இயல்பாக இருக்க
நாட்கள் நகர்ந்தது...
தனிமை கனத்தது...
இலைகள் உதிரும் சாலையில்
சிரித்து பேசிய நீ இல்லை...
நான் விழி கனத்த தருணங்களில்
இதழ் மலர வைத்த நீ இல்லை...
பேருந்து பயணங்களில் தோள் சாய்த்து
கொள்ள நீ இல்லை...
சதா செல்ல சண்டை போட்டு
ஊடல் கொள்ள நீ இல்லை...
யாதுமாகி நின்ற நீ யாரோவாகினாய்..
ஏதுவாக இருந்த நான் ஏழையானேன்...
பிரிந்த பின் காதல் கொண்டேன்..
முற்று புள்ளியின் சில புள்ளிகள்
நான் வைத்து கொண்டேன்..
நீ முற்று புள்ளிக்கு பின் அடுத்த
காதல் கவியையே எழுதிக்கொண்டாய்.
உன் தாளில் எழுத்து பிழையாய் நான்...
என் தாளில் கவி வரியாய் நீ...

காதல் கடிதம் 2


என் அசட்டு காதலியே!!


உன் கடிதம் கண்டேன்...
காதல் கண்டேன்....
போதை கொண்ட வண்டானேன்
வேழம் கொன்ற வேந்தனானேன்
சோழம் கண்ட ராஜ ராஜனானேன்
கட்டியணைத்து கொள்ள
என் ஆண்மை துடித்தது...
தாண்டி சென்றேன் கலாச்சார சுழலில்
சிக்கிய காகிதமாய்...
ஆனால் உன் ஒவ்வொரு
வார்த்தையும் எனக்குள் ஓடி திரிகிறது
உதிரத்தில் கலந்து..
பேராசை வந்தது எனக்கு
இன்னொரு தடவை உன் அஞ்சல் காணும் ஆவலில்
இருபது தாள் கசக்கியெறிந்து
விட்டேன்,
என்னால் உனக்கு நிகராக ஒரு
சொல் கூட இயலவில்லை..
மறு படி எனக்கொரு கடிதம் எழுது காதலியே
உன் மக்கு காதலன் கற்று கொள்வேன்.

மனிதன்



தெப்பைகுள தாமரை அழகுணராது
வன்புணர்ந்த நுணலானான்
காமவெறி கொண்ட போது…

மின்சார கம்பிகளில் கூடு
கட்டி கொண்ட பறவையானான்
தன் மனை துறந்து பிறன் மனை புகுந்த போது…

விடம் கக்கும்
அரவமானானான்
நச்சு வார்த்தைகள் நா கொண்ட போது…

இடி மழை மின்னல்
உணராத எருமையானான்
சுய கௌரவ சங்கிலிகள் அறுத்த சேவகனான போது…

விளக்கினை நாடும்
விட்டிலானான்
வேசி வீட்டில் வாசம் கொண்ட போது…

கட்டுங்கடாத
காளையானான்
சுயம் சொல்லும் பயம் மறந்த போது…

ஒரிரு தருணங்களில்
ஆறறிவு கொண்ட
மனிதனுமானான்
வலி உணர்ந்த போது….

சலிக்காதவரை முத்து
தெரிவதில்லை
வலிக்காதவரை வாழ்வு
தெரிவதில்லை

14 March 2014

அனுபவம்

ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும்
கொன்று உரமாக்கி
கொப்பும் கிளைகளுமாக
இதயத்தின் இடுக்குகள் எங்கும்
நிரம்பி நின்றன வலி மரங்கள்….

இளமையின் ஆரம்ப நாட்கள்
ஒவ்வொன்றுமே வெற்று காகிதங்களாக...
எழுதிய ஒவ்வொரு வரிகளும்
இலக்கணம் சரி பார்க்கப்படாத காவியமாக…

ஆனால் அனுபவம்
ஒரு ஆரவாரமான ஆசான்…
காவியங்களை சூனியமாக்கினான்...
ஆறாத சில வலிகளால் மனதை சுற்றி வேலியிட்டான்…
போதாதென்று
பயங்களால் தாளிட்டான்..

இன்று சிறக்க துடிக்கும் சின்ன பறவையில்
வண்ணச் சிறகுகளாய் விரிந்த கனவுகளும்...
உந்தி எழுந்த போதெல்லாம்
விலங்குகளாய் கால்களுக்குள்
கனத்த தளைகளும்...
சூழ்ந்த ஏகாந்தத்துள்
விடை தேட விளங்கா விடுகதையாய்
ஒரு வாழ்க்கை....




18 December 2011

உன்னுடன் ஒரு இரவு


மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

நாணம் ஆடை நெய்ய
காதல் காமம் கொள்ள‌
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன்ஒரு இரவு

தீயில் தீயா மோகங்கள்
நீரில் நீறா தாகங்கள்
அகத்திணையில் மருகி
கலிதொகையில் பெருகி
கைக்கிளையாய் கலந்து
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

கரும்பச்சை பட்டு
கடல் ஆழ விழிகள்
குளிர்ந்த கூந்தல்
அலர்ந்த உதடு
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஓரு இரவு

கடலலை மனை நிலம் மறந்து
விழி முதல் உயிர் வரை கலந்து
அகம் முதல் புறம் வரை மறந்து
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

தங்க நிலவொளிக்க‌
கங்குல் கதவடைக்க‌
பின்னும் தீராமல்
உறக்கம் மறந்து
கலக்கம் களைந்து
கன்னி எழுதிய காதல் காவியமாய்
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

++++++++++++++++

11 November 2011

தொடுவானம்


எடுத்து வைத்த முதல் அடி...
வலிக்க வைத்த முதல் ஊசி...
அணைத்து தந்த முதல் முத்தம்...
ஆறு வயதில் நான் கண்ட முழு நிலா...
எடுத்து வளர்த்த பட்டு பூச்சி...
ஆயிரம் தரம் குட்டு பட்டும்
கைக்குள் வராத‌ 'இ'...
அலுக்காமல் கேள்விகள்
சலிக்காமல் நீ சொல்லும் பதில்கள்...
இளம் காலையில் துயில் கலைத்து
நீ ரசிக்க நான் சிணுங்க பார்த்த
சூரியன் திருடிய பனித்துளி
வானம் எட்ட எட்ட பறந்த
முதல் கடற்கரை பட்டம்...
நீர் துளைந்து நான் கொண்ட காய்ச்சல்
விழி நனைய உடன் நின்ற நீ...


பத்து வயது நான் நிரம்பு முன்
தெவிட்ட தெவிட்ட நீ தந்த அத்தனை
நினைவுகளும் இன்னும் கலையாமல்
மனப் படமாய் எனக்குள்..

இருளில் நான் மருள
ஒளியாய் நீ நிற்பாய்
இன்றும் இருளில் மருள்கிறேன்.............

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய்!

To my younger brother, who is an eternity away from me.

03 October 2011

தண்டனை


இச்சைகள் அடக்கியறியா உடல்
வக்கிரங்கள் வார்த்தெடுத்த மதி
உடலுக்கும் மதிக்கும் உவப்பளிக்க
தற்காலிகமாய் ஒளிந்து கொண்ட மனசாட்சி
ஈசன் மறைந்து நீசன் தோன்ற
இத்தனை போதாதா???

கண்ணை கட்டி ஆடிய வெறியாட்டம்
பல வாளி தண்ணீர் துளிகளால்
உடல் கழுவிய பின்னும்

வேதனைகளை வில்லாக்கி
வினாக்களில் நாணேற்றி ஏவிய
ஒரு காய்ந்த கண்ணீர் துளி அம்பு
உருகி உருளும் அருவமான
மெழுகு துளிகளாகி உஷ்ணம் மாறாமல்
உடல் வருத்தியது...

நீயல்ல‌ என சாட்சியங்களும்
சந்தர்ப்பம் என சட்டமும்
பொய்யை மெய்யாய்
சான்றழிக்க
அசரீரியாய் ஒலித்த உண்மை மட்டும்
மனதை சல்லடைகளாக்கி
மனிதத்தை உலுக்கியது...
செங்குருதி வற்றி
அமிலத்தில் இதயம் துடிப்பது போல்
நெஞ்செரித்தது..
அஃறிணை உதாரணம் நீ என
கண்ணாடியில் தோன்றி விம்பமே
காறி உமிழ்ந்தது..

ஆசை கோபம் ஓய்ந்து
உறங்கும் மனிதம் விழிக்கையில்
சில தவறுகளின் தண்டனைகள்
இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்
ஒரே தடவையில் வருத்துவது போல
பலர் அறியாதது
ஆனால் வலி மிகுந்தது.


+++++++++++++++++

09 September 2011

அன்னையும் அவளும்

பள்ளி பருவத்திலிருந்தே
செலவு செய்தால் குறைந்து விடுமோ என்று
எந்த பெண்ணிடமும் சொல்லாமல்
சேமித்த காதலை
சின்ன சிரிப்பாலும் கடைக்கண் பார்வையாலும்
மொத்தமாய் திருடி கொண்டு காதலியானாள்..

அதிகம் பேசாதவள்
நிறுத்தாமள் பேசினாள்..
நான்கே எழுத்துகள் கொண்ட என் பெயருக்குள்
நாற்பது செல்ல சுருக்கங்கள்
அவள் செய்தாள்..

ஒரு நாள் அலை கரையில்
மணல் விளையாடியபடி கேட்டாள்
"ஒரு நாளில் எத்தனை தடவை என்னை நினைப்பீர்கள்?"
"உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு"
என்றேன் தொன்று தொட்டு வந்த காதலன்களை போல‌

அடுத்து கேட்டாள்
"உங்களுக்கு உங்க அம்மாவையா என்னையா அதிகம் பிடிக்கும்?"
என்று
அவளை தான் பிடிக்கும் என்று நான் சொல்வதை
எதிர்பார்த்திருப்பாள்
ஆனாலும்
"என் தாயை என்றேன்"
சின்னதாய் ஒரு சிணுக்கத்துடன்
"நான் தான் உஙகள் உலகம் என்றீர்களே?? எல்லாம் பொய்யா?? "
என்றாள்
"காதலியே... நீ என்னை காதலிக்க தகுதிகள் எனக்குண்டு
இல்லாவிடில் காதலிப்பாயா??
ஆனால்
என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்
ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்"
என்றேன்

03 January 2011

கடைசி கனவு


வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் இருந்த
கடைசி நிமிட துளிகளில்
செத்துகிடந்த ஆயிரம் கனவுகள்
ஆவிகளாய் ஆதங்கங்களாய் மருட்டின
செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று
உயிர் வலிக்க என்னை
உற்று பார்த்தது
பெற்று போட்டு விட்டு பேண மறுத்த தாயை பார்ப்பது போல்…

ஏகாந்தத்துக்குள் ஆயிரம் கேள்விகள் அது கேட்க
சந்தர்ப்பங்களை சாடினேன்
சூழ்நிலைகளென சூழுரைத்தேன்
கூசாமல் பொய்யுரைத்தேன்
மானுடத்தையும் மல்லுக்கிழுத்தேன்

ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு
மறைந்து போனது என் கடைசி கனவும்!!
கோழையாய் நானும் செத்து போவேனோ??


+++++++++++++++++++++++

கலைந்த கனவுகள்


சிற்பமாகையில் சிதைக்கும் சுத்தியல்களாய்
சித்திரமாகையில் வெட்டியெறியும் கத்திரிகளாய்
பறவையாகையில் பாய்ந்திழுக்கும் ஓநாய்களாய்
மலராகையில் கடித்து குதறும் மந்தைகளாய்
சில வக்கிர மானுடங்கள்…

போராடினோம்… மன்றாடினோம்…
வக்கிரங்கள் வஞ்சித்தன
உக்கிரங்கள் உயிர்த்தெழுந்தன
கெக்கலித்தன கிலியூட்டின

போராட்டம் இழந்து
மண்ணில் சரிந்து
சாம்பலில் கலந்தோம்..
வக்கிரங்கள் கும்மாளமிட்டன
குதித்தாடின!!

செதுக்கிய உளியும்
தீட்டிய தூரிகையும்
பறக்க வைத்த சிறகுகளும்
மொட்டவிழ்த்த தென்றலும்
அழுது கொண்டிருந்தன
கலைந்த கனவுகளுக்காய்!!

உலகம் உறங்கையில் உறங்காத வஞ்சம்
நம் கல்லறைத் தோட்டங்களுக்கு காவலாய்!

28 December 2010

நீ தந்தவை…


இடியும் மின்னலும்
கலந்து களிக்கையில்
விரிந்த குடை…

கல்லும் மரமும்
கலந்து உதிர்க்கையில்
புளித்த மாங்காய்…

வார்த்தையும் உதடுகளும்
கலந்து மௌனிக்கையில்
பேசிய கடிதம்…

புல்லும் பனியும்
கலந்து உறங்கையில்
குளிர்ந்த முத்தம்…

மூச்சும் பேச்சும்
கலந்து ஸ்தம்பிக்கையில்
வலித்த பிரிவு…

இசையும் இதயமும்
கலந்து கனக்கையில்
உதிர்ந்த கண்ணீர்…

பேனாவும் காகிதமும்
கலந்து கிறுக்கையில்
பிறந்த கவிதை…

29 November 2010

ஒருதலை வலி


என் கனவுகளுக்குள் நீ
என் கவிதைகளுக்குள் நீ

என் கண்ணிமைகளுக்குள் நீ
என் கண்ணீருக்குள் நீ

என் தனிமைகளுக்குள் நீ
என் தவிப்புகளுக்குள் நீ

என் கோபங்களுக்குள் நீ
என் புன்னகைகளுக்குள் நீ

கானலால் ஒரு சாரலாய் நீ
ஒருதலையாய் உறவிழந்த
உயிர் வலியாய் நான்!!!

சொற்களுக்கிடையில் மௌனமாயும்
மௌனங்களுக்குள் சொற்களாயும்
செல்லரிக்கிறது என் காதல்!!

நிறுத்தாமல் பேசும்
நீ பேசுவதை
நிறுத்தியதால்
மௌனத்தில் கூட
உளறுகிறேன்!!!

28 November 2010

தயக்கம்


சாத்தியங்கள் காறி உமிழ்ந்தன
சந்தர்ப்பங்கள் கதவடைத்தன
ஐந்தடிக்குள் அடங்கிய
எலும்பும் சதையும்
சொன்ன தீர்வு
கூசாமல் கூவி வில்
அழகான மேனியை…

அவள் தாழிட்ட கதவுக்குள்
யாரோ மனைவியரின் கனவுகள்
யாரோ மழலைகளின் புன்னகைகள்
யாரோ தாய்களின் நம்பிக்கைகள்
மரித்தன

சரியா தவறா போராட்டத்துக்குள் அவள்
தாழிட்ட கதவை மறுபடியும்
எவனோ தட்டுகிறான்
தயங்குகிறாள்..
ஆனாலும் திறக்கிறாள்!!!
அவளை தியாகி என்ன
சாதாரண மனுசியாக கூட
ஏற்க மனிதரில்லை
என்பது உண்மை தானே
அவளது அந்த சிறு தயக்கம்
அவள் வைக்க நினைத்த முற்று புள்ளி!!

27 November 2010

மாற்றங்கள்


நண்பன் அழ வைக்கிறான்
எதிரி எதுவும் பேசாமல் தாண்டி செல்கிறான்

உண்மைகள் ஒலியிழக்கிறது
பொய்கள் புரிந்துணர்வு கொண்டாடுகிறது

பகல்கள் பயமுறுத்துகிறது
இரவுகள் இயல்பாய் நிசப்தாமியிருக்கிறது

தெய்வம் சிலைகளாகவே சிந்திக்கிறது
மனிதன் சிந்திக்காமல் தெய்வமாகிறான்

நட்பு காதலாகிறது
காதல் மறுபடியும் நட்பாகிறது

இதயம் அங்கேயே இருக்கிறது
இணையம் காதல் பரிமாற்றம் செய்கிறது

இதிகாசங்கள் மறக்கப்படுகின்றன
இழி காவியங்கள் எழுதப்படுகின்றன

அழகிய தருணங்கள் தொலைகின்றன
தொலைபேசிகள் பேசிக்கொள்கின்றன

மரங்கள் தறிக்கப்படுகின்றன
விதைகள் மாற்றியமைக்கப்படுகின்றன

இயற்கையை சிதைக்கிறோம்
அதையே மீண்டும்
செயற்கையால் மீள் நிரப்புகிறோம்

16 October 2010

வலி


தொண்டையில் முள்
புரிந்தது
தூண்டில் மீனின் வலி

சிறையில் ஒரு இரவு
புரிந்தது
கூண்டு கிளியின் வலி

பட்டினியாய் சில நாள்
புரிந்தது
எச்சை பாத்திரத்தின் வலி

செயற்கையான இயற்கை
புரிந்தது
காதலின் வலி

+++++++++

04 October 2010

எது காதல்?


புத்தகத்து நடுவில் மயில் இறகு போல
பிரசவிக்காமலே போன
பள்ளி காதல்.

வாத பிரதிவாதம் முடிந்தும்
தீர்ப்பு எழுதாமலே
முடிந்து போன கல்லூரி காதல்.

செவியும் உதடும்
சில இலக்கங்கள் தேய்ந்தும்
இலக்க மாற்றத்துடன்
தொலைந்து போன செல் பேசி காதல்.

மணிக்கு முன்னூறு வேகத்தில்
கைவலிக்க விசைப்பலகையை
கையாண்டும்
கண்காணாமலே போன முகப்புத்தக காதல்.

ஹோசானாவுக்காகவே
அடுத்தவீடு இளம் பெண்களிடம்
அநயாசமாய் வந்த
விண்ணை தாண்டி வருவாயா காதல்.

புது அச்சம் புன்னகை
கடனில் முழுகி சில பொன்னகை
புது மணமகளிடம்
புது வெட்கம் போல வந்த கட்டாய காதல்.

இட்லிக்கு சட்னி அரைத்துவிட்டு
வியர்வை துளிர்க்க
வேலைக்கு கணவனுடன்
மனைவியும் சேர்ந்தோடும்
சம்சா(கா)ர கடல் காதல்

ஏதோ போல மனைவி இருக்க
ஏதோ போல ஒன்று தேடும்
ஏதோ ஒரு காதல்.

எது காதல்?

30 September 2010

இல்லை!!


தெருவோர கல் முதல்
சிலை கொண்ட கல் வரை
பாலபிசேகம் பட்டாபிசேகம்
ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது
ஏழை வயிறு…
கல்லுக்குள் கடவுள் இல்லை

முந்நூறாவது நாளாக
கையில் கனத்த ரோஜாவுடன்
அவளுக்காக காத்திருப்பு
அன்றும் தாண்டித்தான் செல்கிறாள்
தீண்டச் சொல்ல
பூக்களுக்குள் வார்த்தை இல்லை

சிந்திய முதல் வெட்கம்
சேமித்த முதல் முத்தம்
இனித்த காதல்
வலித்த பிரிவு
நினைவுகளுக்குள் நிம்மதி இல்லை..

தீண்டாமை
வறுமை
சமவுரிமை
அறியாமை
கயமை
அத்தனையயும் மை கொண்டு மாற்ற நினைத்தான்
கவிதைகளுக்குள் சாட்டை இல்லை..

24 September 2010

முரண்கள்


எரி மலையும்
பனி மலையும்
ஒரே பூமியில்

சுடும் வெயிலும்
கடும் குளிரும்
ஒரே நாளில்

வன் முள்ளும்
மென் மலரும்
ஒரே செடியில்

பணக்காரனும்
பிச்சைகாரனும்
ஒரே தெருவில்

கடவுளும்
கல்லும்
ஒரே சிலையில்

சேறும்
தாமரையும்
ஒரே குளத்தில்

காந்தியும்
கோட்சேயும்
ஒரே நாட்டில்

கண்ணீரும்
புன்னகையும்
ஒரே வாழ்க்கையில்

முரண்களுக்குள் மட்டும்
முரண்கள் இல்லை

20 September 2010


ஒண்டு
நாலு
பத்து
அம்மா சொக்கா தா
ரசித்தேன்
திருத்தவில்லை

விழி வலி


நீ தந்த கடிதங்கள்…
நீ தந்த முத்தங்கள்…
மணித்தியால துளிகள் உன் குரலுடன்
மரித்த பொழுதுகள்…
உனை நினைத்து நான் உருக
யாரோ எழுதிய பாடல்கள்…
உனை நினைத்தேங்கி
நான் எழுதிய கிறுக்கல்கள்…
என நான்
சேகரித்த உன் நினைவுகளை
செலவு செய்ய மனமில்லை
இன்று எங்கோ மின் விசிறிக்கடியில்
நீ உறங்கையில்
நான் நட்சத்திரங்களடியில் இருந்து
எண்ணி எண்ணி சேமிக்கிறேன்
பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல்
உறங்காமல்
ஏனோ இதயம் மட்டும்
பெருங்குரலெடுத்து அழுகிறது
அனாதை ஆனது அதுவல்லவா??

18 September 2010

மலடியின் நீ



நீர் எழுத்தா நீ
நிறமிழந்த வானவில்லா நீ
என் வானில் ஒளியிழந்த
விடிவெள்ளியா நீ
என் இதழ்கள் மறந்த
புன்னகையா நீ
என் விழிகள் சுமக்கும்
உப்பு திராவகமா நீ
என் கைகளுக்குள் அடங்காத
மென்காற்றா நீ
என் ஆறாம் அறிவு தீண்டாத
அதிசயமா நீ
என் சொந்தமாகாத
பந்தமா நீ
இளம் காலைகளில் என்
துயில் கலைகையில்
தொலைந்து போகும்
தேவதையா நீ..
யார் நீ???
மலடியின் மடி அறியாத
ஒரு மகள்...



+++++++++++++

அவளும் இவளும்



ஐந்து வயதில் கற்ற அரிசுவடி
எட்டு வயதில் இறக்கிய இளஞ்சோறு
பதினெட்டு வயதில் பெற்றவர் மணக்கூலி கொடுக்க
உற்றவன் புனைந்த பொற்தாலி
இருபது வயதில் இடுப்பில் சிரித்த மகவு
இலக்கணத்தின் அழகி அவள்…

ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
பத்து வயதில் மடிகணினி
பதினெட்டு வயதில் மம்மி டாடி
டம்மியாக
காதலுக்கும் நட்புக்கும் இடையில்
காதில் கடுக்கனுடன்
நின்ற ஏதோ ஒன்றின் காதலி
அழகின் புது இலக்கணம் இவள்…

31 August 2010

நானென்ன இயேசுவா???


பக்கத்து வீட்டுக்காரன் வீடு வேண்டினால்
வாடகை வீட்டில இருக்கும் என்
அடி வயிறில் பற்றி
எரியும் பொறாமை….
பச்சை பிழையெண்டாலும்
என்னை விட்டுகுடுக்கேலா
எண்டு தொடங்கும்
எழுந்தமான சண்டை….
அதிகாரம் செய்பவனை
ஒண்டும் செய்யேலாம
அடக்கி வைச்ச வெறுப்பு..
ஆறு வயது பிள்ளை
தட்டி கொட்டினான மட்டும்
அடக்க முடியா கோபம்…
வாயால மன்னிச்சாலும்
நெஞ்சு முழுக்க சகுனம் பார்த்து
காத்து நிக்கும் வஞ்சம்…
பக்கத்து வீட்டுக்கு போய்
தேத்தண்ணி குடிச்சிட்டு
மூட்டி வச்சிட்டு வரும் கலகம்…
மூட்டை பூச்சி போல
உடம்பை உறிஞ்சும்
ஒரு வித மன சாத்தான்..
அண்டை வீட்டு பிரச்சினை
எல்லாம் அடுக்களையுக்க
அலசி ஆராயும் வம்பு வாய்…

”செய்யாதே” எண்டதெல்லாம்
கட்டாய தேவையானது
இயேசுவா நான்….
இல்லையே…

26 August 2010

துளிகள்


உன்னுடன் நான் சிந்திய
ஒரு துளி கண்ணீர்...
உன்னிடம் நான் அறிந்த
ஒரு துளி வெட்கம்...
உன்னுடன் நான் திளைத்த
ஒரு துளி மௌனம்...
உன்னிடம் நான் அறிந்த
ஒரு துளி பெண்மை...
உன்னுடன் நான் இருந்த
ஒரு துளி தனிமை...
உன்னிடம் நான் உணர்ந்த
ஒரு துளி மென்மை...
உன்னுடன் நான் கண்ட
ஒரு துளி கனவு...
உன்னிடம் நான் இழந்த
ஒரு துளி நான்...
துளி துளியாய் என்னில்
சிதறிய
துளி மழை நீ
தொலைந்து போனதால்
தரிசானேன் நான்….
அன்று சிலிர்த்த ஆசைகள்
இன்று செல்லரித்த துகள்களாய்…
நிதமும் நான் அலறும்
மௌன கதறல்கள்
உன் சுவடுகள்
எனக்குள் பதித்த வலி…

12 July 2010

அவன்


பூக்களை போல
மென்மையானவன் அவன்…
மண் கீழ் வேரை போல
உறுதியானவன் அவன்…
சின்ன புயலை போல
செல்ல சண்டை செய்பவன் அவன்…
சின்ன சின்ன ஊடல்களுக்கு கூட
என்னை ஏங்க வைப்பவன் அவன்…
என் எண்ணங்களுக்கு முகவரி
அறிந்தவன் அவன்…
தாயின் தழுவல்களை போல கதகதப்பானவன் அவன்…
தந்தையை போல் அடம் பிடிக்கையிலும்
அடக்காது ரசிப்பவன் அவன்
ஆனாலும் கண்டிப்பானவன் அவன்…
பெண்மையின் மென்மை
உணர்ந்தவன் அவன்…
என் தனிமைக்கு நட்பு பூண்டவன் அவன்…
தன் ரகசியம் அனைத்தும்
எனக்கு மட்டும் சொல்பவன் அவன்…
அழகிழந்த தருணங்களிலும்
அழகி என்பவன் அவன்…
காதோர நரையின் பின்னும்
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல விவாதங்களை
சலிக்காமல் எதிர்ப்பவன் அவன்…
என் சின்னச் சின்ன கனவுகளை கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீர் என் புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
உறக்கத்திலும் என்னை
மறக்காதவன் அவன்…
கடுஞ்சொல் அறியாதவன் அவன்…
மழை கண்ட நிலம் போல்
இணக்கமானவன் அவன்…
என் உடல் சுமக்கும்
இன்னுமொரு உயிரானவன் அவன்..
எனக்கு மட்டும் அழகானவன் அவன்…
எனக்காக மட்டும் முழுமையானவன் அவன்…
எனக்கு மட்டும் காதல் சொல்ல வந்தவன் அவன்…
அவன் தான் என்னை எனக்கு
மறுபடியும் அறிமுகப்படுத்திய இனியவன்…

++++++

கல்கியின் சிவகாமியின் சபதம்


பல்லவன் சிற்பியின்
ஏழைமகள்…
கிளியினதும் மானினதும்
தோழி…
நடம் ஆடுகையில்
அண்ட சராசரங்களையும்
கையில் அடங்க வைக்கும் கலையரசி….
காதல் கொண்டாள்…
காஞ்சியின் பல்லவகுமாரன் மேல்…
அவன் உள்ளம் கவர்ந்தாள் அறிந்தே…
நீசன் ஒருவனின்
நெஞ்சமும் கவர்ந்தாள் அறியாமலே…
மண்ணாசை பெண்ணாசை
தலைவிரிக்கையில்
யுத்தங்கள் மட்டுமே தீர்வாயிருந்த
காலத்தில் அல்லவா அந்த காதல் மலர்ந்தது…
நீசனின் காதல் பெண்ணில் …
நீசனின் சோதரனின் காதல் மண்ணில்…
காஞ்சியை சூழ்ந்தது நீசன் படை…
காதலன் காத்திருக்க சொன்ன இடம்
நாடி சென்றாள் காஞ்சியை துறந்து
கன்னி…
விதி சிரித்தது…
வஞ்சகன்
வஞ்சியை மட்டும் சூறையாடி
காஞ்சியை தோற்றான் …

தேவலோகம் கூட காணாத
தெய்வீக நடனத்தை
எதிரியின் நாட்டு தெருக்களில்
ஆடவைத்தது விதி…
ஏந்திழை வெஞ்சினம் கொண்டாள்…
கள்ளமாய் கவர்ந்து செல்ல வந்த
காதலனிடம் சபதம் செய்தாள்..
ஏழை மகள் தன் நாடு வர
எதிரி நாடு செங்குருதியில்
ஆறோட வேண்டும் என்றாள்…
அவள் ஆடிய
வீதிகள் கொண்ட வீடுகள்
தீ கொள்ள வேண்டும் என்றாள்…
மான்விழிகளால் காதல் சொன்னவள்
விழி அம்புகளால் துவேசம் தீர்க்க கேட்டாள்…
செங்கனிகள் குழைந்த இதழ்களால்
காதல் சொன்னவள்
இன்று காதல் வேண்டாம்
பழி தான் வேண்டும் என்றாள்…
பிரிவு வருமே என்று போர் மீது
பொய்க்கோபம் கொள்பவள்
இன்று பிரிவு வேண்டும் என்றாள்
போர் வேண்டும் என்றாள்…
காதலன் வெகுண்டான்…
“ஏழை மகள் சபதம் தானே
விட்டு செல்லும்” என்றாள் விழி நீர் சொரிந்து…
அவள் சபதம் தன் சபதம் என ஏற்றான்…
ஆனாலும் அவளை உடன்
வர கேட்டான்…
மறுத்தாள் வஞ்சி...

காதலி சபதம் ஏற்றவன்
ஒன்பது ஆண்டு தவம் போல்
ஒரு படை கொண்டான்…
பெண்ணை சிறைப்பிடித்த
பேடியின் படை வென்றான்…
சிறை மீட்டான் காவிய நடன பொன்மகளை…

வெற்றிவாகை கொண்ட சக்கரவர்த்தி
நகர்வலம்..
மன்னனருகில் ஓர் அழகிய மனையாளை
உப்பரிகையில் நின்ற நடமகள் கண்டாள்…
காதலியின் சபதம் ஏற்றவன்
தந்தை வரமும் ஏற்று
பாண்டியன் மகளை மணம் கொண்டான்
என்பதை அன்றே உணர்ந்தாள்…

இருதயத்தில் ஏதோ ஒரு நரம்பு அறுந்தது…
ஆயிரம் சிலைகளுக்கு
மாதிரி அபிநயம் செய்தவள்
சோக சிலையானாள் சில கணங்கள்…
பின் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது போல்
அவள் நீழ் விழிகளில் நீர் பொங்கியது..
பிரவாகித்தது...
பின் அறிந்தறியா சாந்தி குடிகொண்டது
அவள் மதி முகத்தில்...

அந்த சிலை மகள்
தில்லையாடிய சிவனின்
காலடி தீண்டிய தாலியை
தன் கரங்களாலே பூண்டாள்…
பரவசமாய் நடம் ஆடினாள்…
அந்த அற்புத கலையரசி
சிவகாமி…
சிவனையன்றி
எவனை அடைவாள்..???

10 July 2010

மௌனமான கவிதை


இதய கிடங்கில்
எங்கோ ஒரு மூலையில்
என்றோ புதைந்து போன அவள்
முகம்
தூசு படிந்த சித்திரத்தை
துடைக்கையில் தெரிவது போல்
என் எதிரில்….
ஆழ்ந்த கண்களிற்குள் தேடல்…
அதே அவள் தான்…

சிந்தனையின் எல்லை வரை சென்றும்
அவள் அறியாள் தாய் மடி…
”உறவுகள்”
அகராதியில் கண்டு அவள் அறிந்த
ஒரு வார்த்தை…
நட்சத்திரங்கள் இழந்த வெற்று வானில்
ஒற்றை நிலா போல
அழகான ஆனால் வலி மிகுந்த உவமை அவள்…
வானோடு வாழ்ந்து
தடுக்கி தரையில் விழுந்த தேவதை அவள்…
அனாதை…

போராட்டக்களங்கள் வீரர்களுக்கு
போராட்டம் மட்டுமே களங்கள் அவள் போன்றோருக்கு…
வீரன் தோற்றாலும் போராட்டங்கள் பேசப்படும்
அவள் தோற்றால் பேசவோ யாரும் இல்லை..
பேசப்படவோ எதுவும் இல்லை….
ஆனாலும் அவள் போராட்டம் நான் அறிவேன்
ஒரு ஊமை தோழியாய்..

ஊமை இரவுகளிலிருந்து
ஏக்கங்களை மீட்டெடுத்தாள்…
அர்த்தங்களுக்கு வாழ்வெழுதாமல்
வாழ்வுக்கு அர்த்தமெழுதினாள்..
தோல்விகளை தூர நிற்கும் வெற்றி என்றாள்…
வெற்றிகளை தோல்வி தோற்கடித்த மாயை என்றாள்..
அவளிடம் மண் நோக்கும் நாண பொய்கள் இல்லை…
பெண் என்ற பேதமை தழைகள் இல்லை…
அவள் ஊரறிய சாதித்தது எதுவும் இல்லை…
ஆனால் இருபதாவது வயதில்
இரு ஏழு வயது சிறுமிகளின் அன்னை…
தனித்து இயங்கும் சூரியன் அவள்…

கடல் கொந்தளித்தாலே
கவிதை கிறுக்கும் என்
ஒரே மௌனக்கவிதை அவள்…

07 July 2010

சந்தித்தோம்


அதே நானும் அதே நீயும்
இன்னும் ஒரு தடவை

அதே பேருந்து பயணத்தில்…
அதே எதிர் இருக்கைகளில்…
அதே மௌனத்தில் நான்…
அதே விளங்காத வேதனையில் நீ….
நம் கடைசி சந்திப்பை போல….

ஆனாலும் ஒரு வித்தியாசம்…
இன்று
என்னருகில் என் கணவன்…
உன்னருகில் உன் மனைவி….
முள்வேலியாய் நம் காதல்...

காத்திருக்கிறேன்



உன் இமைகள் கவிழ்கையில்
உன் இதழ்கள் மலர்கையில்
உன் கன்னம் குழைகையில்
உன் வார்த்தைகள் முற்று காணாது மௌனிக்கையில்
உன் பார்வை தழைய மறுக்கையில்
தெரிந்து கொண்டேன் நீயும் என்னை காதலிக்கிறாய் என்பதை
ஆனால் உன் நாவினாலும் சொல்லிவிடு
காதலியே...

29 June 2010

அவளுக்கு மட்டும் தெரிந்த வலி


”இருபத்தி நாலுதானேயாகுது”
”இரண்டாம் தாரம் இப்ப எல்லாரும் செய்யிறது தானே??”
”எங்களுக்கு பிறகு உனக்கு யார் துணை??”
கேள்விகளுடன் ஒரு அப்பா…
மௌனமாக ஒரு மகள்…
மௌனமே மறுப்பாகவும் கூடுமோ??

ஊமையிடமும் வார்த்தைகள் உண்டு
வார்த்தை உறைந்து ஊமையானவர்களும் உண்டு..
இரண்டாவது ஜாதி அவள்…
அவள் நீண்ட மௌனங்கள்
வார்த்தை கொண்டால்
போதிமரங்கள் மட்டும் போதும்
புத்தனை கொழுத்து என்பாளோ???.
மழை பொழிந்த பின்னான களி நிலமாய்
இருந்த அவள் இதயம்
ஒரு கல்லாகி இறுகியிருக்கிறதோ???
இது இல்லாத நெருக்கங்களை
உண்டாக்க விரும்பாத
திண்ணக்கமா??
இல்லை ஏதோ ஒரு நம்பிக்கைக்குள்
உயிர் கூடு காத்து அவள் செய்யும் தவமா???

அனைவரும் ஒப்பாரி வைக்கையில்
அழடி எண்டு அம்மா அறைந்தும்
விழியில் மட்டும் உயிர் கொள்ள
மறுத்ததாம் அவள் கண்ணீர்…
ஆண்டு நான்கு கடந்தும் இன்னும்
அழவில்லையோ??

வலக்கையில் வலை கொண்டு
இடக்கையால் அவள் கன்னம் வருடி
கருக்கலில் வருவதாக சொல்லி
கடல் சென்றவனின்
ஏழை மனைவி அவள்…
காத்திருக்கிறாள் இன்னும்…
கனவு போல் அந்த வலக் கன்னத்து
கடைசி வருடல் மட்டும் இன்றும் ஈரமாக…

மணிக்கொரு தடவை
மின்னி மின்னி காதல் சொல்லும்
கைத்தொலைபேசி இல்லை…
நுனி நாக்கு ஆங்கில காதல் அறிவிப்புகள் இல்லை…
நள்ளிரவு நளினங்கள் இல்லை….
வாழ்கிறதே இன்றும் காதல்…
கடற்கரை குடிசையில்
உப்பு காற்றில்…
கருவாட்டு வாசத்தில்…

தவளைகளின் கூச்சல்
தண்டடியில் சேறு
இலை மறைத்து பாசி
ஆனாலும் இடையில் அழகான மலர்
தாமரை…
அது போல ஒரு காதல்…
ஆனால்
மந்திரத்துக்குள் கட்டுண்டது போல்
கொண்ட மௌனம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த வலி…


++++++++++++

பறப்பதற்கு சிறகில்லை


காதல் கடிதங்கள்
அழகானவை….
யதார்த்தம் மீறியவை….
“பகலதிலும் பௌர்ணமி குளிர்மை உன்னால்”
“கொன்றாலும் சாகாது என் காதல்”
“உன்னை பிரிந்தால் இயங்காது என் உலகம்”
இவையெல்லாம் கடிதங்கள்
நிரப்பிய காதல் அறிக்கைகள்…
ஆனால்
குடையிருந்தும் மழையில்லை என்பது போல்
நிஜமாக திரிக்கப்படும் பொய்கள்…
அறிந்து கொண்டேன்…
வெள்ளொளியில் நிறப்பிரிக்கையில்
தோன்றும் ஏழு வண்ணங்கள் போல
மனிதர்கள் நிறம் பிரிகையில்தான்
அறிந்துகொண்டேன்….

உணர்வுகள் உயிர் வலி கொள்கையில்
கண்கள் பேசும்
தண்ணீர் மொழியான கண்ணீர்
ஆரம்பத்தில் தலையணை தோய்ந்து
பின் விசும்பல்களாகி
இப்போதெல்லாம் மௌனங்களாக மட்டுமே….
இரவில் உடல் கொண்டு உருவாடும் துன்பங்கள்
விடியலின் வெளிச்சத்தில்
தற்காலிக தலை மறைவு...
ஆனாலும் ஆழ் மனதின்
முணுமுணுப்புளிற்கு ஓய்வில்லை...

உறக்கம் மறந்த என் இரவுகள்…
இதயம் கசியும் வெறுமைகள்…
வெண் தாளில் வரைந்த சித்திரங்கள் எல்லாம்
வெறும் கோடுகள் மட்டுமே என்றான
தோல்விகள்…
நட்சத்திர பருக்கைகள் மட்டுமே இரவுணவாகி
கனவிழந்த விழிகள்…
வீடு மறந்த
முகவரி இழந்த மேக கோலங்களை
அண்ணாந்து பார்க்கையில் ஆட்கொள்ளும்
அமானுசிய அமைதி..
வனாந்தரத்தில் உலவும் நிலவு
ஆழ்கடலில் பொழியும் மழை
போல்
உறவற்ற ஓர் தனிமை…
இவையெல்லாம் சுய தண்டனைகளா???
அல்லது
சுயம் வெறுத்தபின் தோன்றும்
ஆழ்ந்த அமைதிக்கான தேடலா???

காதலியானவள் மனைவியானதும்
காதல் இனித்தது
மனைவியானவள் மலடியானதும்
மடிந்தது காதலா?? மனிதமா??
பாலைவனங்களில் தாகம் மிகுகையில்
ஒட்டகவதை உயிர் கொலை அல்ல
அது பாலைவன நியாயமாம்…
ஆனால்
இடமும் காலமும் மட்டுமே
நியாய அநியாயங்களை நிர்ணயிக்கும்
அதிகாரத்தை அளித்தது யார்??
மழை துளிகளை ஏற்கையில்
இடி முழக்கங்களை ஏற்க மறுப்பது
எந்த வகை நியாயம்??
இயற்கை வஞ்சித்த தாய்மை நிராகரிப்பு
தனி ஒருத்தியின் திட்டமிட்ட
சதியாக சித்தரிக்கப்பட்டது
என்ன நியாயம்???
வாழ்க்கை கற்று தர முயற்சிப்பது
ஏமாற்றங்களையும் தோல்விகளையும்
எப்படி பழக்க்கப்படுத்தி கொள்வதுதான்
ஆனாலும்
பழக்கப்படாமல்
இன்றும் பறக்கத்தான் துடிக்கிறேன்
சிறகில்லை…..

26 June 2010

விழிகள்


இளங்கதிர் கோலங்கள் இழந்த கருங்காலை…
விண் நீந்தும் சில வான்மீன்கள்….
இருளும் ஒளியும் இணைகின்ற
இன் முத்த தருணங்களில்
மொட்டகலும் மென் மலர்கள்…
உளியிடம் தோற்ற கல்
சுமந்த சிலை கவிதைகள்..
இயற்கையின் ஈரமான மௌனத்தால்
இசையிழந்த ஏகாந்த இடைவெளியதனில்
கவியின் வார்த்தைகளிற்கான காத்திருப்பு போல்
கண்ணிழந்த அவளின் கனவுகள்
காட்சிகளுக்கு காத்திருப்பு….
கனவின் கயமைகளின் பதில்கள்
இருள் மட்டுமே நிறைந்த இரவுகள்…
விழிகள் ஒளியிழந்தால் கனவுகளுக்குள்ளுமா கதவடைப்பு???
காதோடு சேதி சொல்லி
கையோடு சேராத தென்றல் மட்டும்
துடைத்து செல்லும்
அன்றாடம் அவள் சிந்தும் பல திவலைகளை
விழி வருடி…..
அந்த வருடல் ஒன்றே அவள்
விழி உணரும் உலகு…

புழுதி படிந்த சித்திரங்கள்
வரையப்பட்டும் அறியப்படாதன….
ஒளியிழந்த கண்கள்
உடலிருந்தும் உயிரில்லாதன…
மண் தின்னும் கண்களை கொண்டு
மறு உயிரின் கனவுகளுக்கு
உயிர் கொடுங்கள்
இறப்பிலும் ஒளி காண்பீர்…



++++++++++++++++

02 May 2010

ஏன்??


ஒளியிருந்தும் உயிரிழந்து
உலவுகிறதே என் வானில்
ஒரு நிலா
அது ஏன்??
மாரிக்கால தவளைகள்போல்
நிறுத்தாமல் நிந்திக்கிறதே
என்னை என் மனம்
அது ஏன்??
புள்ளியாகியும் தொலையாமல்
என் பார்வை சிறைக்குள்
பதிந்ததே உன் பாவை முகம்
அது ஏன்??
உன் ஒற்றை சொல்லால்
உலகு மறந்து வான் பறந்த மனது
இன்றும் உன் ஒற்றை சொல்லால்
புவி பிழந்து உயிரீரம் வற்ற
துடிக்குதே
அது ஏன்????
அகாலமாய்
ஒரு அந்தி மாலையில்
மரணித்ததே
நம் காதல்
அது ஏன்??
என் வலி
என் ரணம்
என் கண்ணீர்
என் கேள்விகளின் ஆழம்
அறியாமல் நீ
அது ஏன்???

08 April 2010

என்னில் நீ…


மழையின்றி
நிலமின்றி
விதையின்றி நின்றிருந்த
என் தோட்டம் எங்கும் வண்ண பூக்களாய்
நீ மலர்கிறாய்

இதயம் வலிக்காது
கண்கள் கனக்காது
ஆனந்த நீராகி கன்னம் வழியே
நீ வழிகிறாய்

பாதை தெரியாத
பயணம் புரியாத இருட்டுக்குள்
கை கோர்த்து வழித்துணையாகி
நீ நிற்கிறாய்

உலகம் மறந்து
உறங்கும் நிமிடங்களில்
கனவாகி
நீ நிறைகிறாய்

கனவு கலைந்தும்
கலையாத புன்னகையாகி
உதட்டோரத்தில்
நீ உறைகிறாய்

கடல் வானம் கடந்து
கறையில்லா அன்பால்
என் உள்ளமெங்கும்
நீ வேரோடுகிறாய்

நீ வரும் வரை
என் நிழல் மறந்திருப்பேன்
நீ வந்து விடு
உன் நிழலாகி நான் வாழ்வேன்…

04 April 2010

காத்திருப்பு...


இதழ் விரிக்கும் மொட்டுகள்
தேன் தேடும் வண்டுகளின் காத்திருப்பு….
வான் கடந்து வரும் துளி மழை
தரிசான நிலத்தின் காத்திருப்பு….
வசத்துக்கு வராத வார்த்தை
கவிஞனின் காத்திருப்பு….
பூங்காற்றின் உடல் வருடல்
துளை மூங்கில்களின் காத்திருப்பு….
தாரகை கூட்டத்துக்குள் கரையாத மதி
முப்பது நாட்களின் காத்திருப்பு…
கலங்கரை விளக்கங்கள்
திசை தொலைத்த கப்பல்களின் காத்திருப்பு…
வந்து சேராத கடிதம்
வயதான தாயின் காத்திருப்பு…
மின்னி மறையாத தொலைபேசி
நகம் கடிக்கும் காதலியின் காத்திருப்பு…
விரிந்த நீல வானம்
சிறகு முளைக்காத சிறு குருவியின் காத்திருப்பு..
உன் ஒற்றை வார்த்தை
என் காத்திருப்பு…

02 April 2010

அச்சில்...


உடையாத ஒரு நிலவு
உதிராத சில விண் பூக்கள்
வான் கூரையின் கீழ்
உன் மடி சாய்ந்த நான்
என் விரல் விளையாடும் நீ

வெண் நுரை அலை கரை
அந்தி கதிரவன் அகம் நாடும் பொன் மாலை
மணல் வீடு கட்டும் நான்
அலை திருடும் என் வீட்டை பார்த்து நகைக்கும் நீ

ஓர் மதியம்
உயிர் போகும் உணவு வேட்கை
உப்பு மிகைத்த என் சமையல்
ஊறுகாயுடன் உன் சமாளிப்பு

அதிகாலை
ஆறுமணி பறவை
பாத கொலுசு சிணுங்கும் நான்
பள்ளி கலையாத நீ

சாளரம் சில்லிடும் வான் மழை
உயிர் வரை ஊடுருவும் குளிர்
உன் கைவளைவுக்குள் நான்
நீண்ட மௌனத்தின் பின் உன் முத்தம்

வார்த்தையாடும் நான்
நாடி கொதிக்கும் நீ
ஊடலில் உறையும் நிமிடங்கள்
கன்னம் நிறைத்த என் விழி துளிகள்
சினம் மறந்து என் விழி துடைக்கும் நீ

பஞ்சாய் முது நரை
பள்ளி செல்லும் பேர குழந்தை
உறைந்த நம் நெருக்கம்
உறையாத நம் காதல்

என் கனவுகளில்
நாம் வாழும்
ஆயிரம் பிரதிகள்
அச்சில்...
உறக்கம் கலைந்தாலும்
கலைய மறுக்கும் என் கனவுகள்...



++++++++++

01 April 2010

உனக்கென….


வார்த்தைகள் இல்லாத
ஏழையாய் நான்….
வார்த்தைகள் கொள்ளாத
மௌனமாய் நீ…
இந்த விடியலும் உறக்கமில்லாமல்
விடிய
இரக்கமில்லாமல்
என் இரவுகளை கொல்லும்
ராட்சசனா நீ...
வெண் தாளாகி வினாக்களாய்
காத்திருக்கிறேன்…
வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம்
சில வார்த்தையேனும் எழுதி செல்…

27 March 2010

என்னவானேன் நான்??



கரையோடு கால் கொண்டாலும்
நீரோடு அலையாடும் நிழலானேன்…
மழைக்காற்றில் சிக்கி கொண்டு
கை நில்லாத குடையானேன்…
ஆரவாரிக்காத நீரோடையிலும் வேர் கொள்ள முடியாத
பசும் பாசியானேன்…
ஒளியின்றியே உள் வெப்பத்தில்
உருகும் ஓர் மெழுகானேன்..
வார்த்தைகள் இன்றி மௌனியானேன்
மௌனக்கூச்சலிற்கும் மறுமொழியின்றி
ஊமையானேன்….
சுய விம்பத்துக்கு அந்நியமானேன்…
நண்பர்களுக்கும் யாரோவானேன்…
பனி உருகும் இரவுகளில்
மணிக்கம்பிகளுக்கு தோழியானேன்….
இலக்கிய பிழறல்களுக்கெல்லாம்
இலவச வக்கீலானேன்…
எழுதிய கவிதைகளுக்கு நானே ரசிகையானேன்…
தனிமையில் தளை களைந்து
வெறுமைக்கு வித்திட்டேன்…
வெறுமைக்குள் விரவிய வேதனைக்கு
விஞ்ஞான விளக்கம் தந்தேன்…
வினாக்களுக்கு விடைகள் தவிர்த்தேன்…
விடைகளுக்கு மட்டும் வினாக்கள் கொணர்ந்தேன்…
புன்னகைக்கு புது அர்த்தம் கண்டேன்…
கண்ணீரிற்கோ காவியம் பாடினேன்…
தென்றலுக்கும் உடல் சிலிர்த்தேன்…
கனவுகளுக்குள் கைதியானேன்…
தன்னை மறந்த ஏகாந்த இருட்டில்
காதலெனும் ஆழியில் விழுந்து கலந்தது
என் விழி வழிந்த ஒருதுளியும்….
காரணம் தெரியாமல் ’’என்னவானேன் நான்??’’
என நொடிக்கொருமுறை சலித்து கொண்டேன்…

24 February 2010

காணாமல்..


மாலை நேர வானம்
சில துண்டு மேகங்கள்
ஒற்றையாய் நான்
காட்சி துறந்து இமை கவிழ்த்து…..
காதலுடன் காத்திருப்பு…
வருகிறாய்…
தகவல் சுமந்தது மல்லிகைச் சுகந்தம்…
விழி விரிப்பதற்குள்
உடல் முதல் உள்ளம் வரை
சில்லிட தழுவினாய்…
தினமும் தீண்டியும்
முதல் தீண்டல் போல உருகி நின்றேன்…
உச்சி கூந்தல் சுருளை கலைத்து
ரசித்தாயோ???
ஒதுக்க முயல சிரித்தாய்
மீண்டும் மீண்டும் இப்படி ஒரு வம்புனக்கு…
செல்ல கோபம் நான் கொண்டேன்
என் கோப சுவர்களை தகர்க்க
மேலாடையில் உன் கவனம் செல்ல
சினம் தகர்ந்து
பெண்மையின் நாண சுவர் நான் எழுப்பினேன்
கையது கொண்டு மெய்யது மூடி…
நின் ரகசிய சிரிப்பு என் செவிகளுக்குள்…
சிந்தை மயங்க விழி திறந்தேன்…
விழிகளுக்குள் சிறைப்படுத்த முடியவில்லை
விளங்காத ஒரு வருடலுடன்
விலகிப் போனாய் தென்றல் காற்றே…

21 February 2010

கண்ணின் மணி போன்றவளே…


முந்நூறும் கடந்து
மூன்றாவது நாளில்
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
நீ சிரிக்கையிலே
என் நெஞ்சம் இலவம் பஞ்சாகுதடி
நீ விழி விரிக்கையிலே
என் உலகம் மேலும் அழகாகுதடி
நீ தேவதை கனவு காண்கிறாய்
என் சிறகுகள் விரியுதடி
நீ கையணைப்புக்கு தத்தி வருகிறாய்
என் உள்ளம் பாகாகுதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகிறாய்
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ முத்தமிடுகிறாய்
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகிறாய்
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ பாடி ஆடுகிறாய்
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ கண்ணயர்கிறாய்
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ விழி நீர் சுரக்கின்றாய்
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ என் கைகளுக்குள் உறங்குகிறாய்
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி
நீ அம்மா என்றழைக்கிறாய்
என் ஆன்மா சிலிர்க்குதடி
கடவுள் எனக்காக அனுப்பிய
காதல் பரிசு நீயடி…
என் கண்ணின் மணி போன்றவளே…

20 February 2010

அறியப்படாத ஒருத்தி


ஒரு நள்ளிரவு
மங்கிய சில தாரகைகள்
பாதியாய் உடைந்த வான் நிலா
பாதி ஒளியில் வரி வடிவமாய்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

வெள்ளை மணல் வெளி
ஒற்றை தென்னை
தென்னங்கீற்றில் வீணை மேவிய தென்றல்
கற்றை குழலிலும் மேவி செல்ல
எழுந்து ஒதுக்க முயற்சிக்காத விரல்கள்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

பளிங்கு களவாடியேனும்
களஞ்சிய படுத்த துடிக்கும் கருவிழிகள்
துடிப்புகள் தூரமாக தொலைந்த
இமை சாளரங்கள்
மாரித்தெரு மழை நீர் தேக்கங்கள்
திரை போட்ட விழிகள்
சரிவு கண்டு கன்னம் வழியே
வழிந்த உப்பு நீரோடை...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

செந்நிற மூக்குத்தி சுடர்
மூச்சு காற்றின் வெப்பம்
தாங்காது சிவந்த நாசி
பல் அழுந்தி ரத்தம் கசியும்
இதழ் அதரங்கள்
இச்சையின்றிய வெற்றிடமாய்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

பொருள் பொதிந்த சொற்களால்
விளக்க
அவள் வாழ்வில் பொருளில்லையோ
மணிதுளிகள் பல மடிந்து
சில நிமிட துளிகளின் பின்
ஏகாந்த கன்னிச்சிலை
எழுந்தது...
நடந்தது...
கலந்தது...
பாரதியின் நல்லதோர் வீணை
போல்...

செய்தியாக கூட அறியப்படமாட்டாள்
என அவள் சுமந்து சென்ற
கல் சொன்னது கடலுக்கு...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அந்த அறியப்படாத ஒருத்தி

15 February 2010

வசப்படும்


பாழடைந்த என் இரவுகள்
பனி சால்வைகள் போர்த்தி கொள்ள
உதிரி பூக்களாய்
ஏகாந்த இமை மடி நீர் துளிகள்..
விழியில் உயிர் கொண்டு
இதழ்கடை வரை உயிர் வாழ்ந்து
தலையணை சரிவில் உயிரிழந்து கொண்டிருந்தன
காரிருளில் கண்ணீரின் கலகம்
மனதுக்குள் சங்கேத சலனம்
சாளர திரை நீக்கினேன்
பனி தரளங்கள் சுமந்த பசும் புற்சாலை
குழல் கலைக்கும் குளிர் தென்றல்
மல்லிகையின் மெல்லிய சுகந்தம்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையின்
இதமான கீதம்
வான் எங்கும் சங்க தமிழ் மகளின்
மூக்குத்தி மாணிக்கங்களாய்
முளைத்த மின்மினி விண்மீன்கள்
விண் நிலா இல்லா அமாவாசையில்
விடியலில் கடை வரை விழா போல விழித்திருந்தேன்
தாய் மடியின் இதம் உணர்ந்தது போல்
ஒற்றை பனையடியில் ஒரு தூண்டா மணி சுடர்
விடிவெள்ளி…
விடியலின் அழகான ஆரம்பம்
மனதுக்குள்
விண்ணைதாண்டி வருவாயா விண்மீனே???
என்று வலி மறந்த ஒரு கிள்ளை குரல்….
நான்கு சுவருக்குள் மனதின் மையத்தில்
செங்கோல் கொண்ட வேதனைகள்
திறந்த வானின் கீழ் சிறகுகொண்ட
சருகுகளாயின
இயற்கை அழகானது மட்டுமல்ல
ஆத்மார்த்தமானதும் கூட
புற விழி மூடி அக விழி திறந்தால்
வானம் கூட வசப்படும்….
வாழ்வு மட்டும் வசப்படாதா?

28 January 2010

சரணடைந்தேன்…


அற்றை வானின் ஒற்றை விடி வெள்ளியாய்
அவளை கண்டேன்...
கருக்கல் கலைக்கும் கதிர்களின் செல்ல சினத்தில்
அவளை கண்டேன்..
காலை துளியை சிதற விட்ட புல் நுனியின்
புத்துணர்ச்சியாய்
அவளை கண்டேன்...
தாமரை இதழில் ஒரு துளி கவிதையாய்
அவளை கண்டேன்...
ஏரோடும் இடமெல்லாம் தேரோடும் தேவதையாய்
அவளை கண்டேன்...
கார்வானம் சிந்திய தரளங்களும் சிலுசிலுத்த தென்றலும் தழுவ
கச்சை இழந்த பச்சை சேலையில்
அவளை கண்டேன்...
தமிழ் மகள் விழி முதல் மொழி வரை
ஐம்படையுடன் ஆட்சி செய்யும் ஓரரசியாய்
அவளை கண்டேன்...
வெண் சங்கதில் சங்கத்தமிழ் அழகாய்
அவளை கண்டேன்...
மண் மறந்த வான் மலையில்
துள்ளி விழும் நீர் வீழ்ச்சியாய் வெண்கூந்தலாள்
அவளை கண்டேன்...
தென்னங் குருத்தில் வண்டு கொண்ட போதையில்
அவளை கண்டேன்...
சின்ன தாவர தண்டில் தினவெடுத்து
உலகு காண வந்த ஓரிலையின் புது நரம்பில்
அவளை கண்டேன்...
மாலை செவ்வானில் மரகதமாய்
அவளை கண்டேன்..
ஆலகால அந்தபுரத்தில் ஆயிரம் தோழிகளுடன்
ஓர் மதியாய் வதனம் மலர்த்திய
அவளை கண்டேன்...
காணுமிடமெல்லாம் அழகியவளின் தொல்லை
தாளாது இல்லம் அடைந்தேன்..
எத்திசையிலும் இல்லாத அழகுடன் அழகி அவள்
என் மகவின் மழலை சிரிப்பில் விகசித்து நின்றாள்...
நாவிழந்து போன என்,
இரு விழிமடலும் சிறகாக, பறந்தது நெஞ்சம்
கொள்ளை கொள்ளும் அழகி, அவள் வசம்…
சரணடைந்தேன் சக்தியிழந்து…

25 January 2010

சீதனம்


தட்சிணை கொண்டு சொந்தம் தேடும் பேடிகளே!!!
காலம் தந்த வார்த்தை மடைகள் திறந்து
உமக்கொரு மடல்..
விதிகள் வரைமுறைகள் புரியாத சுழலில் நான்
காரணம் நீவிர்
கரை சேர்க்கும் முயற்சியில் தோற்ற தந்தை
மூன்றாவது மாரடைப்புடன் முக்தி கொண்டார்…
கடைசிவரை தான் சேமித்த பச்சை தாள்களை
பேடிகள் உமக்கு விட்டு விட்டு…
வெயிலில் கூட தொடராதடா உன் நிழல் உன் பின்
அத்தனை சுயமிழந்த சதிரடா நீ…
கண்ணாடியில் தெரியும் விம்பம் உனதல்லடா
ஒரு ஆண்மையில்லா அகதியினது…
உன் கண்ணில் ஒளியாகி
உன் கருத்தில் வார்த்தையாகி
உன் கனவில் நினைவாகி
உடன் வரும் பெண்மையின் மென்மையை விட
பெரும் வரம் ஏதடா உலகில்???
ஏன் உன் பேராண்மை கவசத்தை துறந்து
பிச்சைகாரனாகிறாய்????
விற்க பொருளிழந்த வாணிகனா நீ
உன்னையே விற்கிறாய்???
சந்தை மாடு அல்ல நீ விலை போக…
ஆடவன் நீயெனில் ஆண்மை பூண்..
உன்னவள் உனதாக நீ உடைமை கொள்..
பெரும் பணம் கொண்டவள் வாங்கிய நீயும்
தந்தை பிச்சைகாரனாகி ஏழைமகள் வாங்கிய நீயும்
அவள் உண்மை காதல் மட்டும் காண மாட்டீர் கடைசி வரை..
மின்சாரம் பாயும் மெல்லிய பூவடா பெண்கள்
அவள் கனவுக்கும் நினைவுக்கும் இடையில்
கசங்காமல் காதல் செய்..
பூமி கூட தேவலோகம் ஆகும் உனக்கு மட்டும்..
நினைவு கொள்…
நிமிர்ந்து நில்..

24 January 2010

தேவதை


புல்வெளி நான்,
அதில் தூங்கும் பனித்துளி நான்
மழை துளி நான்,
அதில் நனையும் வானவில் நான்
ஆழ்கடல் நான்,
அதில் துயிலும் முத்து தரளங்கள் நான்
தென்றல் உலவும் சோலை நான்,
புயல் சுழலும் பாலையும் நான்.
மலைகள் சொரியும் நீர் வீழ்ச்சிகள் நான்,
பின் மெல்லென செல்லும் நதி மகள் நான்.
பசிய வயல் வெளி நான்,
அங்கு தலை சாயும் கதிர் தாங்கும் நிலமும் நான்
பூவிதழ் நான்,
பொன்னிலையும் நான்
இறைவன் பூமிக்கென்று அனுப்பிய
மெல்லிய தேவதை நான் இயற்கை...
செயற்கை கொண்டு வதைக்காதீர்
வலிக்கிறது

22 January 2010

வார்த்தையிழந்து.....



காரை காடுகளே
நாரை கூட்டங்களே
சேதி கேளீரோ!!!!
அத்தை மகனில் ஆசை வைத்தேனே
அச்சச்சோ
வெக்கத்தில் கத்திரி மேட்டு
செம்மண்ணா சிவந்தேனே….
சேலையில் சில்லறை முடிப்பாய்
மனசில ஒளிச்சு வச்ச அதை அத்தானுக்கு.
சொல்ல கருத்த குயிலுக்கு
நெல்லு தூவி காத்திருந்தேனே…
கொண்டை சேவலின் கூவலில்
அதை சொல்ல கூதலில் விழித்தேனே..
சேராத சேதி வயல் கிணறு பாசியா படிய கண்டு
கருக்கலில் நான் வச்ச கருவாட்டு குழம்பு கொண்டு
உச்சி வெயிலில் வயல் காட்டு வரம்பளந்தேனே…
பட்டாம் பூச்சி பிடிச்சு தந்தவன் காணாது
படபடக்கும் நெஞ்சு தொலைந்த கதையை
கண் பார்த்து சொல்ல விளைகையில்
மண்ணில பதிஞ்ச கண்கள் மரத்து போயினவே
அத்தனை புலன்களையும் சேர்த்து கொண்டு..
வயல் காடு முதல் வண்டி மாடு வரை
அறிந்த காதல்
வார்த்தையிழந்த காற்றாகி கலந்தனவே…
வளவி கொண்ட கை கோர்க்க
வாராயோ நீயாகவே...

17 January 2010

யாரோவானவள்



சலித்து சலித்து தேடினாள்
அவள் நினைவு சூழலில்
சொந்தம் எனும் சங்கேத வார்த்தைக்காய்…
ஆனால் அவள் நினைவின் தொடக்கம்
எழுத்தறியாத ஒரு பேருந்து சந்திப்பில்
எச்சை அறிந்த பிச்சை கொண்ட ஆரம்பமாகவே
இன்று வரை….
உயிர் வலிகள் குலவும் பொழுதுகளில்
தரை வீழ்ந்த நிலவாக அவள் தனிமை…
வழியறியாத ஊரில் மொழியிழந்த அவள் வெறுமை...
மூங்கில்கள் இழந்த கீதங்களாய்
ஊமையான அவள் இரவுகள்…
காந்தங்கள் இழந்த கவர்ச்சியாய்
பற்றற்ற அவள் கனவுகள்…
மழையிரவில் தாயின் தழுவல்களின்
அடையாளங்கள் அனுமானங்களில் கூட இல்லை.
காய்ந்த இலைகளில் பந்தங்களின் தேய்ந்த சுவடுகள் இல்லை…
கார்கால குதூகல பசுமைகள் இல்லை
பசி அறிந்தவள், ருசி அறியவில்லை
வார்த்தைகள் அறிந்தவள், வார்த்தையாடல் அறியவில்லை
உடல் அறிந்தவள், வயது அறியவில்லை
பெண்மை அறிந்தவள், மென்மை அறியவில்லை..
புலம் பெயர்வோ புயல் மழையோ
புது வித சதி விதியோ
ஆரம்பமும் முடிவும் தெரியாத ஆலகால இருட்டில்
நிராகரிக்கப்பட்ட நிஜங்களை அறியாமல்
தனக்கு தானே யாரோவாகி போனாள்...

16 January 2010

காதல்



கொடி கம்பியில் ஒட்டி கொண்ட
துளி மழை போல அழகானது
பூ தழுவி சுகந்தம் சுமந்த
பூங்காற்று போல இதமானது
உரு கரைந்து ஒளி தரும் மெழுகு போல
வலியானது
கரு திறந்து உயிர் கொண்ட சிறு சிசு போல
புதிதானது
குருத்தோலையில் கரு கொண்ட கவி வரிகள்
போல பழமையானது
கல்லறையில் பூத்து கடவுள் காலடி சேராத
சிவந்த சின்ன மலர் போல அமைதியானது
சில்லறை சிதறல்கள் போல
ஆரவாரமானது
தரையில் பூத்த விண்மீன்கள் போல
அதிசயமானது
பாலை வன வழிப்போக்கனை
காத தூரம் கடக்க வைக்கும்
கானல் நீர் போல பொய்யானது
கண்ணீர்துளியில் கலந்த உப்பு போல்
மெய்யானது
சுவாசகுழாய் சென்றும் செங்குருதி கலக்காத
காற்று போல அதிருஷ்டமில்லாதது
அலை கரை மணல் வீடுகள் போல
நிஜமிழந்தது
போர் நேர சங்கொலி போல
வன்மையானது
மழை நேர குயிலிசை போல
மென்மையானது
காகித கப்பல்கள் போல கரை சேராதது
கலங்கரைகள் போல கரை சேர்ப்பது
பூமி உள் சுமக்கும் செங்கனல் போல
உறங்காதது
ஆதலினால் தான்
காதலிக்காதவனும் காயப்படாதவனும்
மனிதரில் இல்லை

12 January 2010

மனைவியானேன்


தாய் தந்த அழகு
தந்தை தந்த அறிவு
சுமந்து சென்றேன் மனைவியாய்
புக்ககத்துக்கு பல பொருட்களோடு
ஒரு பொருளாய்…
கண்ணாடிகளில் என் விம்பம் தேய்ந்து
திடீரென அதீத அழகு கொண்டேன்
அவனுக்கு பிடித்த பதார்த்தம் பரிமாற…
அடுப்படியில் ஒரு படிகமாயே ஆனேன்…
கைக்குட்டையிலிருந்து கழுத்து பட்டி வரை தந்து
கையசைத்து அலுவலக நாட்களில் விடை கொடுத்தேன்
மாலை வேளை சாலை பார்த்து
காத்திருந்தேன் ஈருருளியின் ஓரொலிக்காய்…
வெள்ளி கிழமை விரதம் இருந்தேன்
வரலட்சுமிக்கு காப்பு கட்டினேன்
மரபு வேலி சிறை கொண்ட பெண்ணானதால்
ஒரு படியிறங்கி தோற்றும் போனேன்
கை கோர்த்தவனால் அல்ல
கை கோர்த்து கொண்டதால்..
ஒரு வகுப்பு தவறாமல் நான்
வாங்கிய பட்டம் பெட்டகத்துக்குள்
கணவனின் பட்டம் நான்கு சட்டத்துக்குள்
சுவரில்….
தலைவலி காய்ச்சல் கொண்டாலும்
சமையல் முதல் சகலமும் நான் தான்
கொண்டவன் தலைவலி கொண்டால்
அமிர்தாஞ்சனம் தேய்த்து ஆவி பறக்கும்
கோப்பியும் இலகு ஆகாரமும்….
காலை பத்திரிகை முதல் எதிலும் முன்னுரிமை
அறியாமலே ஆண் கொள்ள
தொடர் நாடகத்தில் யாரோ ஒரு அபிக்காக
போராட தொடங்கினேன் எனக்குள்
அவளும் பெண்தானே…
சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
உயிர் கொண்டு
என் தனியறை கதவருகில் செத்து போனது..

11 January 2010

திசை தெரியாமல்


சருகுகளில் சலனங்களில்
காலடி தடங்கள் கேட்டு
ஆண்டாண்டாய் கதவு திறக்கும்
முதிய தாய்…
பாலாபிசேகம் எம்பெருமானுக்கு
வாயிலில் இல்லாமையில் பசித்திருக்கும்
இயலாத பக்தன்…
நூறு விண்ணப்பங்களின் பின்னும்
கிட்டாத வேலைக்கு மறுபடியும்
அஞ்சலில் விண்ணப்பிக்கும்
விக்கிரமாதித்த பட்டதாரி…
கதவுகளை அடைத்த காதலி
கனவுகளில் கை கோர்த்ததால்
கண்ணீர் சிறைக்குள் தவிக்கும்
ஒருதலை காதலன்…
ஆட்சி மாற்றம் இடைதேர்தல்
அரசாங்க பண சுரண்டல்
அரசியல் மறந்த அவஸ்தையில் அரசியல்வாதி…
கணக்கு பாடத்தில் மட்டும் பத்தை தாண்டாத
பரீட்சை விடைத்தாளை
மறைக்கும் முயற்சியில் பத்து வயது மாணவன்…
சல்லாப வேளையிலும் முன்னாள்
காதலியின் இமையசைவுகளின்
இம்சைகளுடன் சராசரி கணவன்…
ஊழிக்கால துரும்பாய் ஓராயிரம்
மானுட உள்ளங்கள் திசை தெரியாமல்…..