30 September 2010
இல்லை!!
தெருவோர கல் முதல்
சிலை கொண்ட கல் வரை
பாலபிசேகம் பட்டாபிசேகம்
ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது
ஏழை வயிறு…
கல்லுக்குள் கடவுள் இல்லை
முந்நூறாவது நாளாக
கையில் கனத்த ரோஜாவுடன்
அவளுக்காக காத்திருப்பு
அன்றும் தாண்டித்தான் செல்கிறாள்
தீண்டச் சொல்ல
பூக்களுக்குள் வார்த்தை இல்லை
சிந்திய முதல் வெட்கம்
சேமித்த முதல் முத்தம்
இனித்த காதல்
வலித்த பிரிவு
நினைவுகளுக்குள் நிம்மதி இல்லை..
தீண்டாமை
வறுமை
சமவுரிமை
அறியாமை
கயமை
அத்தனையயும் மை கொண்டு மாற்ற நினைத்தான்
கவிதைகளுக்குள் சாட்டை இல்லை..
24 September 2010
முரண்கள்
எரி மலையும்
பனி மலையும்
ஒரே பூமியில்
சுடும் வெயிலும்
கடும் குளிரும்
ஒரே நாளில்
வன் முள்ளும்
மென் மலரும்
ஒரே செடியில்
பணக்காரனும்
பிச்சைகாரனும்
ஒரே தெருவில்
கடவுளும்
கல்லும்
ஒரே சிலையில்
சேறும்
தாமரையும்
ஒரே குளத்தில்
காந்தியும்
கோட்சேயும்
ஒரே நாட்டில்
கண்ணீரும்
புன்னகையும்
ஒரே வாழ்க்கையில்
முரண்களுக்குள் மட்டும்
முரண்கள் இல்லை
20 September 2010
விழி வலி
நீ தந்த கடிதங்கள்…
நீ தந்த முத்தங்கள்…
மணித்தியால துளிகள் உன் குரலுடன்
மரித்த பொழுதுகள்…
உனை நினைத்து நான் உருக
யாரோ எழுதிய பாடல்கள்…
உனை நினைத்தேங்கி
நான் எழுதிய கிறுக்கல்கள்…
என நான்
சேகரித்த உன் நினைவுகளை
செலவு செய்ய மனமில்லை
இன்று எங்கோ மின் விசிறிக்கடியில்
நீ உறங்கையில்
நான் நட்சத்திரங்களடியில் இருந்து
எண்ணி எண்ணி சேமிக்கிறேன்
பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல்
உறங்காமல்
ஏனோ இதயம் மட்டும்
பெருங்குரலெடுத்து அழுகிறது
அனாதை ஆனது அதுவல்லவா??
18 September 2010
மலடியின் நீ
நீர் எழுத்தா நீ
நிறமிழந்த வானவில்லா நீ
என் வானில் ஒளியிழந்த
விடிவெள்ளியா நீ
என் இதழ்கள் மறந்த
புன்னகையா நீ
என் விழிகள் சுமக்கும்
உப்பு திராவகமா நீ
என் கைகளுக்குள் அடங்காத
மென்காற்றா நீ
என் ஆறாம் அறிவு தீண்டாத
அதிசயமா நீ
என் சொந்தமாகாத
பந்தமா நீ
இளம் காலைகளில் என்
துயில் கலைகையில்
தொலைந்து போகும்
தேவதையா நீ..
யார் நீ???
மலடியின் மடி அறியாத
ஒரு மகள்...
+++++++++++++
அவளும் இவளும்
ஐந்து வயதில் கற்ற அரிசுவடி
எட்டு வயதில் இறக்கிய இளஞ்சோறு
பதினெட்டு வயதில் பெற்றவர் மணக்கூலி கொடுக்க
உற்றவன் புனைந்த பொற்தாலி
இருபது வயதில் இடுப்பில் சிரித்த மகவு
இலக்கணத்தின் அழகி அவள்…
ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
பத்து வயதில் மடிகணினி
பதினெட்டு வயதில் மம்மி டாடி
டம்மியாக
காதலுக்கும் நட்புக்கும் இடையில்
காதில் கடுக்கனுடன்
நின்ற ஏதோ ஒன்றின் காதலி
அழகின் புது இலக்கணம் இவள்…
Subscribe to:
Posts (Atom)