
எட்டு மணி வரை உறங்கியதற்காக
அன்னையிடம் ஒரு குட்டையும்
ஆவி பறக்கும் காலைத் தேனீரையும்
வாங்கிக் கொண்டு
தந்தையுடன் நாளேடுகள் அலசிக் கொண்டதும்
குளியலறைக்கு செல்வதற்குள் தம்பியுடன்
ஓர் உள் நாட்டு யுத்தத்துக்கும்
உண்ணா விரத போராட்டத்துக்கும்
ஒத்திகை போட்டு கொண்டதும்
வயல் வெளியில் குடை எறிந்து
மழை போர்வையை போர்த்தி கொண்டதும்
கிணற்றடியில் உட்கார்ந்து கொண்டு
நட்சத்திரங்களை கணக்கெடுத்து கொண்டதும்
உலகக் கிண்ண போட்டிகளுக்காக
தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து
உச்சி வானம் அதிர அலறிக் கொண்டதும்
தோழிகளுடன் உட்கார்ந்து படிப்பதாக
நடித்து கொண்டதும்
தோட்டத்து பூக்களுக்கெல்லாம் அழகி போட்டி
வைத்து மல்லிகையை அழகு ராணியாக்கி கொண்டதும்
நினைவு திரையில் இசையின்றி
ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது
நிறுத்த மனமின்றி வெறித்து கொண்டிருந்தேன்
மண மேடையில் அமர்ந்த படி
நாடக மேடை மறைப்பாக தலையை
நாணப் போர்வைக்குள் கவிழ்த்து கொண்டு…
நேற்று வரை சுதந்திர வானில்
சுற்றி திரிந்த தந்தையின் சின்ன மகள்
நாளை முதல் ஒருவனின் மனைவி
ஒரு குடும்பத்தின் மருமகள்
இருபதையொட்டிய வயதினரின் அண்ணி
இவர்கள் தான் இனி என் குடும்பம்
இவர்கள் வெறுப்பை தேடிக் கொள்ளக்கூடாது
புதிதாக முளைத்த விதி முறைகள் மருட்டின
திசை தெரியாத இருளாக இருந்தது
சுற்றிலும்
இவன் தான் விடியலோ என்று
விழியை லேசாக உயர்த்தி ஏறிட்டேன்
கணவனாக போகின்றவனை
கல்லாக உட்கார்ந்திருந்தான்
என் கண்களுக்குள் கரித்தது.