20 February 2010

அறியப்படாத ஒருத்தி


ஒரு நள்ளிரவு
மங்கிய சில தாரகைகள்
பாதியாய் உடைந்த வான் நிலா
பாதி ஒளியில் வரி வடிவமாய்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

வெள்ளை மணல் வெளி
ஒற்றை தென்னை
தென்னங்கீற்றில் வீணை மேவிய தென்றல்
கற்றை குழலிலும் மேவி செல்ல
எழுந்து ஒதுக்க முயற்சிக்காத விரல்கள்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

பளிங்கு களவாடியேனும்
களஞ்சிய படுத்த துடிக்கும் கருவிழிகள்
துடிப்புகள் தூரமாக தொலைந்த
இமை சாளரங்கள்
மாரித்தெரு மழை நீர் தேக்கங்கள்
திரை போட்ட விழிகள்
சரிவு கண்டு கன்னம் வழியே
வழிந்த உப்பு நீரோடை...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

செந்நிற மூக்குத்தி சுடர்
மூச்சு காற்றின் வெப்பம்
தாங்காது சிவந்த நாசி
பல் அழுந்தி ரத்தம் கசியும்
இதழ் அதரங்கள்
இச்சையின்றிய வெற்றிடமாய்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

பொருள் பொதிந்த சொற்களால்
விளக்க
அவள் வாழ்வில் பொருளில்லையோ
மணிதுளிகள் பல மடிந்து
சில நிமிட துளிகளின் பின்
ஏகாந்த கன்னிச்சிலை
எழுந்தது...
நடந்தது...
கலந்தது...
பாரதியின் நல்லதோர் வீணை
போல்...

செய்தியாக கூட அறியப்படமாட்டாள்
என அவள் சுமந்து சென்ற
கல் சொன்னது கடலுக்கு...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அந்த அறியப்படாத ஒருத்தி