21 February 2010
கண்ணின் மணி போன்றவளே…
முந்நூறும் கடந்து
மூன்றாவது நாளில்
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
நீ சிரிக்கையிலே
என் நெஞ்சம் இலவம் பஞ்சாகுதடி
நீ விழி விரிக்கையிலே
என் உலகம் மேலும் அழகாகுதடி
நீ தேவதை கனவு காண்கிறாய்
என் சிறகுகள் விரியுதடி
நீ கையணைப்புக்கு தத்தி வருகிறாய்
என் உள்ளம் பாகாகுதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகிறாய்
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ முத்தமிடுகிறாய்
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகிறாய்
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ பாடி ஆடுகிறாய்
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ கண்ணயர்கிறாய்
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ விழி நீர் சுரக்கின்றாய்
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ என் கைகளுக்குள் உறங்குகிறாய்
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி
நீ அம்மா என்றழைக்கிறாய்
என் ஆன்மா சிலிர்க்குதடி
கடவுள் எனக்காக அனுப்பிய
காதல் பரிசு நீயடி…
என் கண்ணின் மணி போன்றவளே…
Subscribe to:
Posts (Atom)