12 July 2010

கல்கியின் சிவகாமியின் சபதம்


பல்லவன் சிற்பியின்
ஏழைமகள்…
கிளியினதும் மானினதும்
தோழி…
நடம் ஆடுகையில்
அண்ட சராசரங்களையும்
கையில் அடங்க வைக்கும் கலையரசி….
காதல் கொண்டாள்…
காஞ்சியின் பல்லவகுமாரன் மேல்…
அவன் உள்ளம் கவர்ந்தாள் அறிந்தே…
நீசன் ஒருவனின்
நெஞ்சமும் கவர்ந்தாள் அறியாமலே…
மண்ணாசை பெண்ணாசை
தலைவிரிக்கையில்
யுத்தங்கள் மட்டுமே தீர்வாயிருந்த
காலத்தில் அல்லவா அந்த காதல் மலர்ந்தது…
நீசனின் காதல் பெண்ணில் …
நீசனின் சோதரனின் காதல் மண்ணில்…
காஞ்சியை சூழ்ந்தது நீசன் படை…
காதலன் காத்திருக்க சொன்ன இடம்
நாடி சென்றாள் காஞ்சியை துறந்து
கன்னி…
விதி சிரித்தது…
வஞ்சகன்
வஞ்சியை மட்டும் சூறையாடி
காஞ்சியை தோற்றான் …

தேவலோகம் கூட காணாத
தெய்வீக நடனத்தை
எதிரியின் நாட்டு தெருக்களில்
ஆடவைத்தது விதி…
ஏந்திழை வெஞ்சினம் கொண்டாள்…
கள்ளமாய் கவர்ந்து செல்ல வந்த
காதலனிடம் சபதம் செய்தாள்..
ஏழை மகள் தன் நாடு வர
எதிரி நாடு செங்குருதியில்
ஆறோட வேண்டும் என்றாள்…
அவள் ஆடிய
வீதிகள் கொண்ட வீடுகள்
தீ கொள்ள வேண்டும் என்றாள்…
மான்விழிகளால் காதல் சொன்னவள்
விழி அம்புகளால் துவேசம் தீர்க்க கேட்டாள்…
செங்கனிகள் குழைந்த இதழ்களால்
காதல் சொன்னவள்
இன்று காதல் வேண்டாம்
பழி தான் வேண்டும் என்றாள்…
பிரிவு வருமே என்று போர் மீது
பொய்க்கோபம் கொள்பவள்
இன்று பிரிவு வேண்டும் என்றாள்
போர் வேண்டும் என்றாள்…
காதலன் வெகுண்டான்…
“ஏழை மகள் சபதம் தானே
விட்டு செல்லும்” என்றாள் விழி நீர் சொரிந்து…
அவள் சபதம் தன் சபதம் என ஏற்றான்…
ஆனாலும் அவளை உடன்
வர கேட்டான்…
மறுத்தாள் வஞ்சி...

காதலி சபதம் ஏற்றவன்
ஒன்பது ஆண்டு தவம் போல்
ஒரு படை கொண்டான்…
பெண்ணை சிறைப்பிடித்த
பேடியின் படை வென்றான்…
சிறை மீட்டான் காவிய நடன பொன்மகளை…

வெற்றிவாகை கொண்ட சக்கரவர்த்தி
நகர்வலம்..
மன்னனருகில் ஓர் அழகிய மனையாளை
உப்பரிகையில் நின்ற நடமகள் கண்டாள்…
காதலியின் சபதம் ஏற்றவன்
தந்தை வரமும் ஏற்று
பாண்டியன் மகளை மணம் கொண்டான்
என்பதை அன்றே உணர்ந்தாள்…

இருதயத்தில் ஏதோ ஒரு நரம்பு அறுந்தது…
ஆயிரம் சிலைகளுக்கு
மாதிரி அபிநயம் செய்தவள்
சோக சிலையானாள் சில கணங்கள்…
பின் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது போல்
அவள் நீழ் விழிகளில் நீர் பொங்கியது..
பிரவாகித்தது...
பின் அறிந்தறியா சாந்தி குடிகொண்டது
அவள் மதி முகத்தில்...

அந்த சிலை மகள்
தில்லையாடிய சிவனின்
காலடி தீண்டிய தாலியை
தன் கரங்களாலே பூண்டாள்…
பரவசமாய் நடம் ஆடினாள்…
அந்த அற்புத கலையரசி
சிவகாமி…
சிவனையன்றி
எவனை அடைவாள்..???

1 comment:

  1. கவிதையின் ஓர் தையத்தக்கா நடனம்!!!அற்புதம்.சொல்ல வார்த்தைகள் இல்லை.மிக நன்றாக உள்ளது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    http://machamuni.blogspot.com
    http://www.machamuni.com
    http://kavithaichcholai.blogspot.com

    ReplyDelete