08 December 2009

குற்றவாளி


மாலை மறைவில் அழுத்திய கரங்கள்
என் கன்னங்களில் சிவப்பையும்
கண்களில் கனவுகளையும்
தேக்கி விட
அழகாக புன்னகைத்து கொண்டிருந்தேன்
என்னை தன்னவளாக்கி கொண்டவனின் அருகில்
ஒரு நிஜத்தின் நிழற்படத்தில்
அப்பா அம்மா இல்லாமல்
பாட்டியுடன் இருந்த எனக்கு
காதல் வரக்கூடாது என்ற
விதிமுறை எதுவும் இல்லையே
இளம் மாலை பொழுதில்
இயற்கையின் ரம்மியங்களாக
தோன்றிய காதல் எதிர்ப்புகள்
பல தாண்டி
அன்று விழாக் கோலம் கண்டது
கர்ம வீரன் போல தோன்றினான் என் கணவன்
”என்ன செய்ய போகிறோம்???” என்ற இறுக்கம்
தளர்ந்ததாலோ என்னவோ பாட்டி கூட
இறைவனிடம் சென்று விட்டாள்
என் பூமியில் சொர்க்கம் தோன்றியதும்
சின்ன சின்ன ஊடல்களும்
பொங்கி பெருகும் காதலுமாக
நகர்ந்த நாட்களில்
நான் தாய் ஆனதை கூட நம்ப முடியவில்லை
ஓர் பொல்லாத நாளில்
நிலா வானை ரசித்திருந்த வேளையில்
மூன்று முன் பின்னறியாத முகங்கள்
தோன்றியது இரு நொடியோ ஒரு யுகமோ
ஆனால் மறையும் போது
என் உலகத்தை மட்டும் தலை கீழாக்கி விட்டுதான்
மறைந்தது
கைகளில் வீறிட்ட மகன்
கூட தூரத்தில் எங்கோ அருவமாக தோன்றினான்
அத்தனையும் ஸ்தம்பித்து கொண்டது என் உலகில்
ஏனெனின் செங்குருதிக்குள் உயிரிழந்திருந்தவன்
என் உயிரென நான் எண்ணிக் கொண்டு இருந்தவன் அல்லவா!!!!
மீண்டும் ஒரு தடவை அனாதையாக்கப் பட்டேன்
இன்று என் மூன்றாவது திருமண நாள்
கண்ணுக்கு தீட்டிக் கொண்டேன் கண்மையை அழகாக
உற்று நோக்கிய மாமியாரின் பார்வை இடித்துரைத்தது
“எவனை மயக்கவோ? “ என்பது போல
அவளுக்கென்ன தெரியும்
நான் மையிடாத நாட்களில்
என்னை பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பான்
காதலுடன் அவள் மகன் என்று.

No comments:

Post a Comment