08 December 2009

நிமிர்வு


மாம்பழ தும்பியும் பலாப்பழ தும்பியும்
தம்பியுடன் போட்டி போட்டு பிடித்த நாட்களும்
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை
ஊரே கேட்கும் படி வரும் ஐஸ்கிரீம் வானுக்கு
எட்டி பார்த்த நாட்களும்
வான் வந்தாலும் வேண்டி தராத அம்மாவில்
வெறுப்புடன் லக்ஸ்பிறேயும் சீனியும் போட்டு
ஐஸ்கிரீம் செய்த நாட்களும்
தேன் முறுக்கு கிடைக்கும் என்று
நெரிசல் கூட சகித்து அப்பாவின் கை கோர்த்து
நல்லூர் தேருக்கு சென்ற நாட்களும்
கடந்து ஆண்டுகள் ஆகிவிட்டது
இளமை கதவில்
அசாத்தியமான தனிமையில் அமர்ந்திருக்கிறேன்
இன்று அனாதையாக
சுனாமி வந்து போனது
என்னை மட்டும் விட்டு விட்டு
என் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு
தொலைந்த சொந்தங்களும்
தொலையாத ஞாபகங்களுமாக தினமும்
கடலலையின் ஒதுங்கும் கிளிஞ்சல்களில்
தொலைந்தவர்களின் தொடு உணர்வு தேடி
தவிக்கின்றேன்.
என்னை சுற்றி எங்கும் நிசப்தம்
கால் தழுவி செல்லும் கடலலையில்
கூட அன்னையின் தாய்மை உணர்ந்து
கால்கள் விறைக்கும் வரை கடலில்
கால் ஊன்றி நின்றதும் உண்டு
வருடிய அவள் கரங்கள் இன்று ஒரு நிழற் படத்தில் கூட
இல்லை என்னிடம்
சிறகு விரித்து பறக்க நினைத்த என்
இலக்குகள்
நத்தை கூட்டினுள் சுருங்கி கொண்டன
பூக்கள் மடியும் போது கனிகளை
விட்டு செல்கின்றன
என் சுவடுகளை விட்டு செல்ல முடியவில்லை
அதிகாலையில் ஒரு நாள்
அப்பா கூறியது ஆழ்மனதில் ஒலித்தது
” போராளி தோற்றாலும்
அவன் வீரம் பேசப்படும்” என்று
நான் மட்டும் போராடாமல் போக மனம்
வரவில்லை
சிந்தனைக்கு சிறகுகளும் இல்லை
கடிவாளங்களும் இல்லை
ஆனால் தொடக்கம் முடிவு தெரியாத
புதிராக இருந்ததது
எங்கு தொடங்க
எதை தொடங்க
தேடிய திசைகளில் எல்லாம் ஆதரவற்ற
ஆகாயமே தெரிந்தது
வெறுமை என்னை வெல்ல விடக்கூடாது என்று
சபதம் மட்டும் எடுத்து கொண்டேன்
போராட்ட களம் தெரியவில்லை
எதை தேடி போராட்டம் என்று தெரியவில்லை
ஆனால் கண்ணுக்கு தெரியாத
அமானுசிய இருட்டில் ஏதோ ஒரு
சக்தியை எதிர்க்க எண்ணிக் கொண்டேன்
என் காலடி தடங்களை இன்று
அலை எடுத்து சென்றாலும்
என் வாழ்வின் தடங்களை
யாரும் எடுத்து செல்ல விட மாட்டேன்.

No comments:

Post a Comment