08 December 2009

செல்லரித்த சிலுவை





உன்னை தேடிய என் பயணங்கள்
வினாக்களுக்கும் கனாக்களுக்கும் இடையில்
சிக்கி கொண்டு சிதிலமடைகின்றன.
நதிகளை கரைகளும்
நிலா அசைவுகளை முகில்களும்
தேடுவதில்லை.
ஏகாந்தம் தூண்டிய ஏக்கங்களில்
ஏதோ ஒரு புள்ளியில் உன் நினைவு மட்டும்
உன்னை தேட சொல்லி என்னிடம் ஆர்ப்பரிக்கின்றது
பன்னீர் மழை சொரியும் மேகங்களும்
புன்னகை புரியும் மழலை முத்தங்களும்
என் செங்குருதி சிறு துணிக்கைகளும்
கடைவிழியில் துருத்தி கொண்டிருக்கும்
கடைசி கண்ணீர் துளியும்
உன் வரவுக்காக மட்டும் என் வாழ்வில் காத்திருக்கிறது
ஆனால்
நீ வர மாட்டாய் என்னும் உண்மையும்
நான் உன்னை தேட முடியாது என்னும் பொய்மையும்
ஆகுதியில் கரைந்த உன் ஆதரவு கரங்களுக்காய்
அழுகின்ற என் ஆழ் மனமும்
இனம் தெரியாமல் என்னையும்
செல்லரித்த அதே பழைய சிலுவையில் ஏற்றுகின்றது.

1 comment:

  1. //என் செங்குருதி சிறு துணிக்கைகளும்
    கடைவிழியில் துருத்தி கொண்டிருக்கும்
    கடைசி கண்ணீர் துளியும்// அற்புதமான வடிவமைப்பு..வாழ்த்துக்கள்..

    ReplyDelete