08 December 2009

என் அம்மா





















அதிகாலையில் அலாரம்
விழிக்கும் முன்னரே தான் விழித்து
அவசர அவசரமாக பிட்டும்
சம்பலும் செய்து வைத்து விட்டு
ஐந்து மணி சேவல் கூவும்
முன் பின் வளவு துரவில்
ஊற வைத்த நானூறு கிடுகுகளையும்
நளினமாக பின்னிவைத்து விடுவாள்
ஏழு மணிக்குள்
ஏழு மணிக்கு விழிக்கும் ஆறு வயது
மகளுக்கு அடுக்குகள் அனைத்தும் செய்து
ஒன்பது மணிக்கு
உண்டு விட்டு நூறு தேங்காய்களை
கடப்பாரையில் உரித்து
கடகத்தில் வைத்து
தலையில் சுமந்து கொண்டு
சந்தையில் விற்று விடுவாள்.
பனிரெண்டு மணிக்கு வீடு வந்து
அடுத்த சமையல் செய்து பருத்திதுறையில்
படிக்கும் அண்ணனுக்கு மதிய ஆகாரம்
அனுப்புவாள் தட்டி வான் காரனிடம்
கொடுத்து
அத்தனை பனை மட்டைகளையும்
மருதாணி பூசாமலே கைகள் சிவக்க
வெட்டி ஒன்று
ஐம்பது சதத்துக்கு விற்றாள்.
விழுந்த பனம் பழங்களில்
அவள் தலையில் பயணம் செய்யாதவை
மிகச் சிலவே.
வெங்காய பாத்திகளில் வசிக்கும்
மண்புழுக்களை கொல்லாமலே கையால்
பொறுக்கி எடுப்பதில் அவளும் ஒரு ஹை டெக்
விவசாயி
தலையணை உறைகளில் அவள் கை
மயில் பூ போடாமல் அவளுக்கு
தூக்கம் வராது
கால் ஓயாமல் தையல்
இயந்திரத்தில் அவள் உறங்கிப்
போன நாட்களும் உண்டு
பனங் குருத்தில் அவள் செய்த
பாய்களும் ஏழு அடுக்கு பெட்டிகளும்
ஊர் பிரசித்தம்,
ஆனால் உறங்காதது
அவள் கண்கள் தான்
வயல் வரப்புகளில் எல்லாம்
அவள் வலம் வராத இடமே இல்லை.
வயல் விதைப்பது முதல் அறுவடை
அவளும் ஒரு வேலையாள்
சமையல் முதல் சகலமும் அவள் தான்.
இதில் தவணை முறையில் வரும்
தந்தைக்கு ஊறுகாய் முதல்
உப்பு மிளகாய் வரை எல்லாம்
போத்தல்களில்
ஊரில் ஒரு சின்ன மகராணியாம்
அவள் பிறக்கையில்
மணம் முடித்ததும் ஒரு
படித்தவனை தான்
ஆனால் அவள் கண்டதெல்லாம்
தன்னை உருக்கி உருக்கி ஒளி தரும்
மெழுகு வர்த்தி வாழ்க்கைதான்
அவள் உருக்கியவற்றைகளை
சொல்ல என் வாழ் நாள் போதாது
அவள் வடித்த கண்ணீரின்
முன் கடல் நீர் கூட நாணி
கொள்ளும்
ஆனால் அவள் தான்
என் தாய்.
அவள் சிந்திய குருதி
துளிகள் தான் என் எதிர்காலத்தை
இன்னும் வாழ வைக்கிறது
அதனால் அவள் முன்
கடவுள் கூட தலை கவிழ்ந்து
வணங்க வேண்டும் என்பேன் நான்

3 comments:

  1. அவள் சிந்திய குருதி
    துளிகள் தான் என் எதிர்காலத்தை
    இன்னும் வாழ வைக்கிறது
    அதனால் அவள் முன்
    கடவுள் கூட தலை கவிழ்ந்து
    வணங்க வேண்டும் என்பேன் நான்//

    VERY TOUCHING..

    ReplyDelete
  2. //அவள் சிந்திய குருதி
    துளிகள் தான் என் எதிர்காலத்தை
    இன்னும் வாழ வைக்கிறது
    அதனால் அவள் முன்
    கடவுள் கூட தலை கவிழ்ந்து
    வணங்க வேண்டும் என்பேன் நான் //

    கடவுள் வேறு யாருமில்லை,,அவள்தான் என்கிறேன் நான்...நல்லா இருக்குங்க...

    ReplyDelete