08 December 2009

நேற்றைய விதவை

















கல்யாண சந்தையில்
பெயர் மட்டும் தெரிந்தவனின் இடப்புறம் அமர்ந்து
தந்தையின் கடைசி நிலம் மட்டும் அடகு வைத்து
பொற் கொல்லன் செய்த தாலியை
நாணப் போர்வைக்குள் ஏற்றுக் கொண்டு
உணர்வுகளால் எழுத வேண்டிய காதலை
உருவத்தில் மட்டும் ஆண்மகனாக நின்றவனின்
பேடித்தனத்துக்கு காதலியாகி
நான்கு நாட்கள் வாழ்ந்து ஐந்தாம் நாள் விதவையாகி
வாழ்வின் சகல அத்தியாயங்களையும்
வாழ்ந்து விட்டவளாகி
ராசியில்லாதவளாகி
வெள்ளை உடை கொள்ளாத அமங்கலியாகி
எல்லாம் ஆகி முடிந்து விட்டன
ஆனால்
நியாயமான ஆசைகள் கூட
அடக்கப்பட வேண்டிய கட்டாய கதவுக்குள்
அதீதமான ஆசைகள் ஆர்ப்பரிக்கும்
அநியாய கனாக்கள் காண்கிறேன்
அந்தியில் வரும் கற்பனை காதலனுக்காக
செந்திலகம் சூடி நிற்கிறேன்
துள்ளி விளையாடுவாள் சின்ன மகள்
என்ற குருட்டு நம்பிக்கையில்
கரடி பொம்மை வாங்கி சேர்க்கிறேன்
பனியிருளில் மழையிரவில்
சாசுவதமான தனிமையில்
அசாத்தியமான அமைதியில்
உரத்து சிரிக்கின்றேன்
இலையுதிர்கால தெருக்களின் சருகுகள் போல
வரட்சியாக
வாழ்விழந்தவள் நான் என்ற வினோதம் கண்டு
.

5 comments:

  1. //துள்ளி விளையாடுவாள் சின்ன மகள்
    என்ற குருட்டு நம்பிக்கையில்
    கரடி பொம்மை வாங்கி சேர்க்கிறேன்//
    நல்ல வரிகள்..

    ReplyDelete
  2. //உணர்வுகளால் எழுத வேண்டிய காதலை
    உருவத்தில் மட்டும் ஆண்மகனாக நின்றவனின்
    பேடித்தனத்துக்கு காதலியாகி//

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கவிதையில் ”தற்கொலை” என்ற வார்த்தை எழுந்தால் நன்றாக அமைந்து இருக்கும்.

    ReplyDelete
  4. Hii Ur poem are really wonderful ..... Keep writing .

    ReplyDelete
  5. தொடர்ந்து எழு துங்களேன் மிகவும் சோகமாகவலி சுமந்தவையாக இருகின்றன.உங்களுக்கும் ஒருவடி காலாய் அமையும்.

    ReplyDelete